Sunday, January 16, 2022

மன நிம்மதி அடைய வழிகள் (மன நிம்மதி, தொடர்-2)   

புகைத்தல் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி உள்ளம் சாந்தமடைய துணைசெய்வதாகக் கருதப்படுகிறது. அதே புகைத்தல் தூக்கத்தை, அல்லது களைப்பை போக்கிக்கொள்ள துணை செய்வதாகவும் கருதப்படுவதுண்டு. இவை இரண்டும் ஒன்ருக்கொன்று முரணானவைகளாகும். எனவே புகைத்தல் எதிர்பார்த்தளவு மன நிம்மதி தருமா என்பது கேள்விக்குரிய விடயமே. ஆதலால் மன நிம்மதி வேண்டி புகைப்பது அத்துணை சிறந்த பலனை தரும் எனக் கொள்ள முடியாது.

மது பானங்களை அருந்துவது நிம்மதி தருவதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் கருதப்படுகிறது. மதுபானத்திலுள்ள சில இரசானப் பொருட்கள் எண்ணங்களில் தாக்கம் செலுத்துவதாக இருக்கலாம். ஆனால் அது மனிதனில் இன்னும் பல பாதிப்புகளையும் உருவாக்கி விடுவதுடன், மதுவுக்கு அடிமையாக்கி விடுவதும் அறிவுபூர்வமாக நிரூபிக்கப்பட்ட அம்சங்களாகும். 

ஏனைய போதை வஸ்துகளும் அவ்வாறுதான். அவை முதலில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருவனவாக அமைந்தாலும் அவற்றால் மனிதனில் ஏற்படும் பக்க விளைவுகள் அவனிடத்தில் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துவது மாத்திரமன்றி தான் மனிதன் எனும் உள்ளுணர்வைக் கூட இல்லாதொழித்து விடுவதையே, அதற்கு அடிமையானவர்களின் செயற்பாடுகள் நிரூபிப்பனவாக உள்ளன. 

உளவியல் மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் மருந்து வகைகளும் அவ்வாறானதே. அவைகள் தற்காலிக தீர்வுகளைத் தருவனவாக அமைந்தாலும் நீண்ட காலத்தின் பின் அவற்றின் பாதிப்புகள் பலவாக அமையலாம். எனவே அந்த மருந்துகளை எடுத்துக்கொள்வது பிழை எனச் சொல்வதை விடவும் அத்தகைய மருந்துகளை உட்கொள்கின்றவர்கள் சில மாற்றுப்பரிகாரங்களிலும் கரிசனை செலுத்தவேண்டும் என்பதுவே பொருத்தமாக அமையும்.  

ஒரு மனிதனின் எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள துணை செய்யும் மற்றோர் அம்சம் தும்மலாகும். அந்த தும்பலின்போது பல்வேறு உடலியல் நன்மைகள் ஏற்படுவதாகச் சொன்னாலும் கூட உளவியல் ரீதியாக ஏற்படும் சாந்தமான நிலையை முக்கியமானதாகக் கொள்ளலாம். ஆனால் இந்த தும்மலை தான் விரும்பியபோது செயற்கையாக ஏற்படுத்தலாமா அல்லது அவ்வாறு ஏற்படுத்துவதனூடாக அந்த உளவியல் பயன்களை அடையாளமா என்பது கேள்விக்குரிய அம்சமாகவே உள்ளதெனலாம்.     

எனவே ஒரு மனிதன் தனது எண்ணங்களைக் கட்டுப்படுத்தி, அதனூடாக நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு சிறந்த வழிமுறையாக "யோக" பயிற்சி முறையின் அங்கமான மூச்சுப் பயிற்சியைக் கூரலாம். அதன் ஒரு அங்கமாகவே பெருமூச்செறிதலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதன்படி மூச்சை அதிகமாக உள்வாங்கி, அடக்கி வைத்திருந்து பின்னர் மெதுவாக விடுவிப்பதும், அதன்பின் சிறிது நேரம் மூச்சை உள்வாங்காமல் தாமதிப்பது, அலைமோதிக்கொண்டிருக்கும் எண்ணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துணை செய்யலாம். இத்தகைய பயிற்சி முறைகளின்போது பின்பற்றவேண்டிய பல விதிமுறைகள் உண்டு. உதாரணமாக காற்றுவழி நோய்தொற்று இருக்கின்ற இடத்தில் இதை செய்தால் விரைவாக நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு. எனவே இத்தகைய பயிற்சிகள் முறைப்படி கற்று பின்பற்றப்படவேண்டும் என்பது சுருக்கமாக சுட்டிக்காட்டப்படுகிறது.    

உள்ளத்துக்கு ஆறுதலையும் மன அமைதியையும் தரக்கூடிய மற்றொரு அம்சம் திருக்குர்'ஆனை அரபு மொழியில் முறைப்படி ஓதுவதாகும். அவ்வாறு ஓதும்போது அதன் கருத்து விளங்குவதாக இருந்தால் இன்னும் சிறப்பு. ஆனால் கருத்து தெரியாமல் ஓதுவது மாத்திரமே சிறந்த பலனைத் தரக்கூடியதாகும். அதற்கு பல காரணங்கள் உண்டெனலாம். முதற்கண் அது இறைத் தன்மையை தன்னுள் பொதிந்திருப்பதாகும். அடுத்து ஒரு மனிதன் பேசும் போது ஏற்படும் உளவியல் காரணிகள் அதில் உள்ளடங்கியிருப்பதாகும். அத்துடன் அரபு மொழியமைப்பிலுள்ள அம்சங்கள் காரணமாக மூச்சுப் பயறிச்சியினூடாக கிடைக்கும் சில நன்மைகளும் அதனூடாக கிடைப்படாததாகும். இத்தகைய பல வழிகளூடாக திருக்குர்'ஆனை ஓதுவது உள்ளத்துக்கு ஆறுதல் தருவதாகவும். மன அமைதியை ஏற்படுத்துவதாகவும் அமைகிறது.

அவ்வாறே, தனக்கு நெருங்கியவர்கள் மற்றும் நம்பிக்கைக் குரியவர்ககளிடமிருந்து கேட்கும் ஆறுதல் வார்த்தைகளும் மன அமைதி தருவதாக அமையும். அத்தகைய ஒரு முறையே உளவியல் ஆலோசனை எனும் அம்சத்தினூடாக கடைப்பிடிக்கப்படுகிறது.

மன அமைதி தரக்கூடிய மற்றொரு அம்சமாக இஸ்லாம் போதிக்கும் தொழுகையைக் கொள்ளலாம். மன அமைதி சீர்குலைந்த நிலையில் தொழமுடியுமா என்பது கேள்விக்குரிய அம்சமாக இருந்தாலும், அதையும் தாண்டி தொழுகையை மேற்கொள்வது மன அமைதி தருவதாக அமையும் என்பதையே நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் செயல்பாடு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. (பார்க்க அபூ தாவூத்: 4985 )   

உடலை அசைத்து விளையாடும் விளையாட்டுக்களும், உடற் பயிற்சிகளும் மன அமைதி தரக்கூடியனவாகும். அதுபோலவே தனது கவனத்தைக் குவிக்கக் கூடிய அல்லது தனக்கு விருப்பமான செயற்பாடுகளில் ஈடுபடல் மற்றும் உணவுகளை உட்கொள்ளல், குடிபானங்களைப் பருகள் என்பனவும் மனதுக்கு ஆறுதல் தரக்கூடியனவாக அமையும்.   

அவ்வாறே பல்வேறு பிரச்சினைகள் உருவாகி உள்ளம் அலைமோதிக்கொண்டிருக்கும் நிலையில் தற்கொலையே ஒரே முடிவு எனத் தீர்மானிக்காமல், "இறைவா என்மீது அதிகம் பொறுமையை ஏற்படுத்தி அருள்வாயாக" (பார்க்க அல்குர்'ஆன் 2:250) என இறைவனிடத்தில் பிரார்த்திப்பதும், கவலை ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என இஸ்லாம் போதிக்கும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுவதும் மனதை ஆறுதல் படுத்துவதாக அமையும். அவைகளாவன: 

  • திருக்குர்'ஆன் போதித்துள்ள ஒரு உன்னத மந்திரமான "நாமெல்லாம் இறைவனுக்கே சொந்தமானவர்கள், அவனிடமே மீண்டும் செல்வோம்"  எனும் அர்த்தம் கொண்ட திருக்குர்'ஆனின் (2:156) பகுதியை திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டே இருத்தல்.    
  • இறைதூத முஹம்மத் ஸல் அவர்கள் மீது ஸலவாத் சொல்லிக்கொண்டிருத்தல்.  (பார்க்க முஸ்லிம் 408   )
  • ஷைத்தானின் தீங்கை விட்டும் இறைவனிடத்தில் பாதுகாப்புத் தேடல். (பார்க்க அல்குர்'ஆன் 7:201, 16:98 )
  • "இறைவனே எனக்குப் போதுமானவன், அவனிடமே எனது சகல காரியங்களையும் பொறுப்புச் சாட்டி விடுகிறேன்" என சொல்லிக்கொள்ளல் (பார்க்க அல்குர்'ஆன் 16:42 )
  • அல்லாஹ்வே நீயே அனைத்துக்கும் சொந்தக்காரன் எனும் திருக்குர்'ஆன் வசனத்தை ஓதிக்கொள்ளல் (3:26)
  • உலக வாழ்க்கை என்பது வெறுமனே விளையாட்டுகளும், கேளிக்கைகளும் எனும் திருக்குர்'ஆன் வசனத்தை ஓதிக்கொள்வதும், (பார்க்க அல்குர்'ஆன் 57:20 ) 
  • திருக்குர்'ஆனின் அத்தியாயங்களான "தாஹா", "கஹ்பு", "யூஸுப்", "துஹா" ஆகியவைகளின் மொழிபெயர்ப்பை வாசித்தல் (கருத்து விளங்குமா இருந்தால் அரபியில் ஓதலாம்.)  

மன நிம்மதியற்றுப் போவதாக உணரும் சந்தர்ப்பங்களில் மேற்சொன்ன வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஓரளவு நிம்மதியை அடைந்து கொள்ளலாம். 

உலகில் யாவரும் தேடி அலைந்து கொண்டிருக்கும் மன நிம்மதியை தரக்கூடிய இத்துணை அம்சங்கள் இருக்க, அவைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒன்றில் தற்கொலை செய்துகொள்வதாக முடிவெடுத்தல் அல்லது அதற்கு சமமாக கருதக்கூடிய  பிறர் மீது அத்துமீறும் செயல்களில் ஈடுபடத் துணிதால், அல்லது மது பணம் மற்றும் போதை வஸ்துக்களை நாடிச் செல்லல் என்பன எத்துணை மடமையான அம்சங்கள் என்பது உயிரின் பெறுமதி தெரிந்தவனுக்கல்லவா புரியும்.......! அதற்கும் அப்பால் யாரையும் வலுக்கட்டாயமாக வாழச் செய்ய முடியாதல்லவா..? 

மனிதனது மனம் எத்தகையது என்பதை சரியா விளக்கூடிய ஒரு அம்சமே கம்யூட்டர் ஆகும். அதன் முக்கிய இரண்டு பிரிவுகள், ஒன்று கடினபாகங்கள் (hardware) மற்றொன்று மென்பொருள் (software) என்பனவாகும். இந்தப் பெயர்கள் எதேச்சையாக உருவாகியதே அல்லாமல் நினைத்து வைக்கப்பட்டது எனக்கூற முடியாது. ஆனாலும் அவை மனிதனது உடலையும் உள்ளத்தையும் சரியாக பிரதிபலிப்பனவாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

கம்யூட்டரில் உள்ள மென்பொருள் என்பதைப் போல் உள்ளமும் மென்மையானதாகவும், பலவீனமானதாகவும் இருப்பது யாரும் சிந்திக்கத்தக்க முக்கிய விடயமாகும். இந்த மென்மையான உள்ளத்தில் இலகுவாக பாதிப்புகள் ஏற்பட்டு விடும். சிறி சிறு விடயங்களும் அதில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையலாம்.  ஆதலால் உள்ளத்தை பாதிக்கும் அம்சம்சங்களை விட்டும் தவிர்ந்து கொள்வதும், அதை வலுப்படுத்தும் அம்சங்களில் ஈடுபடுவதும் மன நிம்மதிக்கு வழிவகுக்கும் அம்சங்களாகக் கொள்ளலாம்.

உள்ளத்தைப் பாதிக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று பார்க்கத்தகாதவைகள் என பொதுவாக வரையறுக்கப்பட்டவைகளாகும். அது என்ன பார்க்கத்தகாதவைகள் எனும் கேள்வி எழுவதாக இருந்தால் அதற்குறிய அறிவார்ந்த ஒரு பதிலே சிறு பிள்ளையாக இருக்கும் போது  எதையெல்லாம் பார்ப்பது அருவருப்பாக அல்லது உள்ளத்தை உறுத்துவதாக அமைந்தனவோ அத்தகைய அம்சங்களை பார்ப்பது எனச் சொல்லலாம். ஆங்கிலத்திலே அதை (pornography) எனச் சொல்வதுடன் சிறு பிள்ளைகள் பார்க்கக் கூடாதவை (Adults Only) என பொதுவாக வரையறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்தகைய அம்சங்களை பார்ப்பது உள்ளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை கண்களூடாக உட்செல்லும் நஞ்சு என வகைப்படுத்திக் கொள்வதும் மிகையாகாது.

அவ்வாறே, உள்ளத்தை வலுவூட்டக்கூடிய பல்வேறு அம்சங்ககளும் காணப்படுகின்றன. அவைகளிற் பல வழிமுறைகள் எல்லா மதங்களிலும் போதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அவைகளுடன் சேர்ந்தாற்போல் உள ஊக்குவிப்பு பேச்சுக்கள் (Motivational) என வரையறுக்கப்படும் பேச்சுக்களை கேப்பதும், திருக்குர்'ஆன் போதிக்கும் சிறந்த மனிதர்களான நபி மார்களின் வாழ்க்கச் சரிதையை கற்றலும், ஏனைய சிறந்த மனிதர்களில் வாழ்க்கைச் சரிதையை கற்றலும் ஆகிய இன்னோரன்ன அம்சங்கள் உள்ளத்த்தை வலுவூட்டும் அம்சங்களாக அமையும். 

அவ்வாறே, முறையான தூக்கமும் உள ஆரோக்கியத்துக்கு உதவுவதுடன் முறையற்ற தூக்கம் உள்ளத்துக்கு பாதிப்பாக அமையும் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கதாகும். 

இத்தகைய பல்வேறு அம்சங்கள் உள ஆரோக்கியத்தை பேண உதவுவதனால் அவற்றை பின்பற்றுவதனூடாக மன அமைதியை அடைந்து கொள்ள முயற்சிக்கலாம்.   

தொடர்ந்தும் படிக்க      


No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...