அரசியல் களம்-2
அரசியல், கலிமாவுக்கு அடுத்து ஒரு சிறந்த செயல் என்றால் மிகையாகாது. தொழுகை,
நோன்பு, ஸகாத், ஹஜ், ஸதகா என்றெல்லாம்
நற்செயல்கள் உண்டு. அவை அனைத்தும் குறிப்பிட்ட கால, நேர சூழ்நிலைக்குள் வரையறுக்கப்
பட்டனவாகும். ஆனால் ஒரு மனிதன் சமூகத்து சிறந்த அரசியல் தலைமைத்துவத்தைக் கொடுப்பது,
அவன் ஆரம்பித்தது முதல் மரணிக்கும்
வரைக்கும், அதன் பின்னர் மறுமை
நாள் வரைக்கும் நன்மை பெற்றுத்தரும் செயல் என்பதை மறுக்கக் கூடிய ஆதாரங்களும் உண்டோ........!
இத்துணை சிறப்பு மிக்க அரசியற் களமாடலை வலியுறுத்தியோ, அல்லது அதை ஊக்கப் படுத்தியோ
அல்குர்'னிலோ, நபிப் போதனைகளிலோ அதிகம் சொல்லப்படாமைக்கு காரணங்களும்
இல்லாமலில்லை. அவ்வாறு எதுவும் சொல்லப் படவில்லை என்பதனால் அன்றும் இன்றும் யாருமே
அரசியலில் ஈடுபடாமல் இருக்கவில்லை என்பதை ஒரு முக்கிய காரணமாகக் கொள்ளலாம். அதேவேளை
ஒரு சிறந்த சமூகதலைவன் எத்தகைய சிறப்பு மிக்கவன் என்பதுபற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.
நிழலே இல்லாத அந்நாளில் நிழல் பெறக்கூடிய ஏழு வகையினரில் ஒருவன் நீதியான தலைவன் என்பதாக
நபிப் போதனைகளில் குறிப்பிடப் பட்டுள்ளது (புஹாரி:6086, முஸ்லிம்: 2427). அத்தகைய நீதி செலுத்தும் தலைவன் தற்கால ஊழல் பேர்வளிகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதை முதற்கண் சுருக்கமாக
விளங்கிக் கொள்ளலாம்.
ஒரு முறை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தன்னுடன் பள்ளிக்கு வந்திருந்த தனது பேரனான
ஹஸன் (றழி) சிறுவனாக இருந்த நிலையில் அங்கிருந்த பொதுச்சொத்திலிருந்த ஒரு ஈச்சம் பழத்தை
எடுத்து வாயில் போடுவதைக் கண்டவுடன், ச்சீ ச்சீ அதைத் துப்பி
விடு "பொதுச் சொத்திலிருந்து சாப்பிடுவது ஆகாது என்பது உனக்குத் தெரியாதா"
எனப் போதித்தார்கள் (பார்க்க (புஹாரி:1490, முஸ்லிம்:1069). பொதுச்
சொத்து விடயத்தில் ஒரு தலைவனின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான உயர்ந்த வழிகாட்டல்
(ஸுன்னா) இதுவாகும். பொதுச் சொத்து விடயத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது, நம்பிக்கை துரோகம் மற்றும், பொறுப்பை உதாசீனம் செய்தல் என்பனவாக கருத முடியுமாக
இருந்தாலும், பொதுச் சொத்தை நேரடியாக உண்பதற்கும், தலைமைத்துவ அதிகாரத்தைப்
பயன்படுத்தி, பொதுச்சொத்தை தந்திரமாக உண்பதற்கும் இடையில் அதிக
வேறுபாடில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். (முக்கியத்துவம் கருதி இந்த அம்சம் இங்கு
சுருக்கமாக தொட்டுக்காட்டப்பட்டுள்ளது).
இஸ்லாத்தின் போதனைகளின் அடிப்படையில் கால, சூழ சந்தர்ப்பத்துக்கேற்ப செயற்பாடுகளின்
முக்கியத்துவம் அதிகரிக்கும். அதற்கமைய தற்கால சூழ்நிலையில், சமூகத்துக்கு சிறந்த அரசியல்
தலைமைத்துவம் வழங்குவது ஒரு சிறந்த செயலாக அமைவது மாத்திரமன்றி அது ஒரு கடமை எனச் சொல்வதும்
மிகையாகாது.
“சிறுபான்மைச் சமூகம்” எனும் சமூக நிலைமையை எடுத்துக் கொண்டால், ஜனநாயகம் எனும் பரந்த அமைப்பின் ஒரு அங்கமாக அது அமைந்திருப்பது முதற்கண் கருத்தில்
கொள்ளத்தக்க தாகும். இந்த ஜனநாயகம் எனும் பரந்த குடைக்குக் கீழ் சிறுபான்மை முஸ்லீம்
சமூகம் எந்த இடத்தை வகிக்கிறது என்பது வேறு ஒரு தலைப்பின் கீழ் விளங்கிக் கொள்ள வேண்டிய
முக்கிய அம்சமாதலால் விரிவு கருதி மிகச் சுருக்கமாக தொட்டுக்காட்டப் படுகிறது.
இந்த ஜனயாக முறைமையின் முக்கிய அம்சமான தேர்தல் எனும் அம்சத்தில், முஸ்லீம்கள் பெரும்பான்மை
சமூகத்தினருடன் சேர்ந்தும், தனிக் கட்சியாகவும் தேர்தல் முறையில் பங்கேற்பதற்கு
அனுமதி உண்டு எனும் மார்க்க அறிஞர்களின் தீர்வுக்கு ஏற்ப, அத்தகைய அரசியற் செயற்பாடுகளில்
ஈடுபடுவது இஸ்லாத்தின் வரையறைக்குள் அமைகிறது (இது துறைசார் அறிஞர்களின் ஆய்வுடன் சம்பத்தப்
பட்டதாகையால், அது சம்பந்தமான உசாத்துணைகள் சுட்டிக் காட்டப் படவில்லை). அதற்கமைய முஸ்லீம்
சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பிலும், அரசினூடாக முஸ்லீம்களுக்குத்
தேவையான பாதுகாப்பு மற்றும் ஏனைய சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும், அத்தகைய ஜனநாயக அரசியலில் ஈடுபடுவது அனுமதிக்கப்படுகிறது என்று சொல்வதை விடவும்
போதிக்கப்படுகிறது எனச் சொல்வதே சாலப் பொருந்தும். அத்துடன் ஒரு சிறந்த அரசியல் முன்மாதிரியை வழங்குவதன்
மூலம் இஸ்லாத்தின் சிறப்பை பிற சமூகத்தினருக்கு எடுத்தியம்புவதற்கும், பொதுவாக இறைவனது படைப்பினங்களுக்கு சேவை செய்வதற்கும், மற்றும் பூமியை வளப்படுத்தல்
எனும் இறை கட்டளையை நிறைவேற்றுவதற்கும் (பார்க்க அல்குர்'ஆன் 2:30, 1161) ஒரு சிறந்த தளமாக அரசியற் களம் அமைந்திருப்பது
சுட்டிக்காட்டத் தக்கதாகும். ஆனால் முஸ்லீம் சமூகத்தின் தற்கால அரசியல் பிரதிநித்துவத்தின்
நிலை எப்படி அமைந்திருக்கிறது என்பது விளக்கிச் சொல்ல அவசியமற்றதே... இன்று அரசியல்
பிழைப்பு நடத்துகின்றவர்கள் சினிமா துறையில் ஈடுபட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
எனச் சொல்வது பொருத்தம் எனலாம். ஆதலால் முஸ்லீம் சமூகத்துக்கு முறையான தலைமைத்துவம்
வழங்குவதன் முக்கியத்துவம் இமயம் தொடுகிறது எனச் சொல்வதே சாலப் பொருந்தும்.
ஒரு சிறந்த அரசியற் தலைவன் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் அல்லது பண்புகள்
பற்றி "அரசியல் களம்-1" எனும் தலைப்பின்
கீழ் விளக்கப் பட்டுள்ளதால் அது இங்கு தவிர்த்துக் கொள்ளப் படுகிறது (மேலும்
"அரசியல் முன்மாதிரி" எனும் பதிவும் இதனுடன் தொடர்பு பட்டதே). அந்த அடிப்படைத்
தகுதிகள் வளர்ந்துக் கொள்ளத் தக்கனவாக இருக்கும் அதேவேளை, இன்றய சூழ்நிலையில், இருக்கின்ற
போட்டி நிலைமைக்கு மத்தியில் அத்தகைய பண்புகள் பெற்றவர்களை, உருவாக்குவது அத்துணை இலகுவான
காரியமன்று. எனவே அத்தகை பண்புகளை இயற்கையாக தன்னகத்தே கொண்டவர்கள், இந்த சிறப்பு மிகு
பணியை பொறுப்பேற்க முன்வரவேண்டும் எனச் சொல்வதை விடவும், முன்வாருங்கள் என வேண்டிக் கொள்வது, ஒரு கருத்தாளன் செய்யும் தவறாக
அமையாதல்லவா...?
தான் வாழும் நாட்டின் மொழிகளில் திறமை பெற்றவர்கள், (பார்க் அல்குர்'ஆன் 14:4) தனது கருத்துக்களை கவர்ச்சிகரமாக முன்வைக்கக் கூடிய
பேச்சுத் திறமை கொண்டவர்கள் (அல்குர்'ஆன் 28:34, புஹாரி: 5764), சிக்கலான சந்தர்ப்பங்களில் சிறப்பான
முடிவுகளை எடுக்கும் திறமை பெற்றவர்கள் (21:79), பலதரப்பட்ட சமூக அங்கத்தவர்களுடன்
சேர்ந்து செயலாற்றக் கூடியவர்கள்,
சமூகத்திலே செல்வாக்குள்ள
குடும்பப் பின்னணி கொண்டவர்கள், முதற்பார்வையில் மக்களை தன்பால் ஈர்த்து கொள்ளக்கூடியவர்கள்
போன்ற முக்கிய பண்புகளை தன்னகத்தே கொண்டவர்கள், இச் றப்புமிகு பணிக்காக சுயமாக முன்வரவேண்டும்
அல்லது அத்தகையவர்கள் இனங்காணப்பட்டு பொறுப்புகள் வழங்கப்படுவதுடன், உதவி ஒத்தாசைகளும்
வழங்கப் படவேண்டும். இதுவிடயமாக அல்குர்'ஆன் முன்வைக்கும்
போதனை இங்கு மிகச் சுருக்கமாக சுட்டிக் காட்டப் படுகிறது (பார்க்க 2:247).
இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் பரம்பரையில் தோன்றிய நபி (ஸல்) அவர்கள் ஒரு உத்தம
மனிதராவார். அவருக்கு மனித சமூகத்துக்கு இஸ்லாம் எனும் உன்னத மார்க்கத்தை வழங்கும்
சிறப்புரியாமையை அல்லாஹ் வழங்கினான். அதுபோலவே அவரது குடும்பத்தைச் சேர்ந்த அலி பின்
அபூ தாலிப் (றழி) அவர்களுக்கு சிறைக் கைதிகளை எவ்வாறு நடாத்துவது எனும் விதி முறைகளை
வகுத்துத் தரும் சிறப்புரிமையை வழங்கினான். தான் முகம் கொடுத்த "ஜமல்" மற்றும்
"சிப்பீன்" யுத்தத்தின் போது அவர் யுத்த-கைதிகளை எவ்வாறு நடாத்தினார் எனும்
வழிமுறைகளே, இன்று யுத்தக் கைதிகளின் உரிமைகளாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளன என்பது
சிலாகித்து நோக்கத்தக்கதாகும். அதன் தொடரில் அவரின் பிள்ளையான "ஹுசைன்" (றழி)
அவர்களுக்கு, “இஸ்லாமிய சமூகத்துக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவம் வழங்கப் படுவதன்
அவசியத்தை” உலகுக்கு சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பை வல்ல நாயன் வழங்கினான் என்றால் மிகையாகாது. அதற்கமைய அரசியல் களத்தின் கதா நாயகன் ஹுசைன் பின் அலி (றழி) ஆவர் என்பது முன்னொரு
சந்தர்ப்பத்தில் (அரசியல் களம்-1) விளக்கப் பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
ஹுசைன் பின் அலி (றழி) அவர்கள் சுவர்க்கத்து வாலிபர்களின் தலைவர் என்பது பொதுவாக
எல்லா முஸ்லீம்களும் ஏற்றுக் கொள்ளும் அம்சமாகும் (ஹாகிம் 4779, திர்மிதி 3768). அந்த சிறப்புமிகு அந்தஸ்தை அடைந்துகொள்ள
அவர் செய்த செயல் என்னவாகத்தான் இருக்கும். அதுதான் முறையற்ற ஆட்டசியை மாற்றி அமைப்பதற்கான
பயணத்தில் ஈடுபட்டதாகும். அவரின் பயணம் வெற்றியடைந்ததா இல்லையா என்பது படம் முடிந்த
பின்னர் கதை சொல்வது போன்றதாகும் (அல்லது கிரிக்கட் ஆட்டம் முடிந்த பின் விமர்சிப்பது
போன்றதாகும்). ஆனால் ஆடுகளத்தில் நிலைமை எவ்வாறிருந்தது என்பதை அறிந்தவர் அவரேயாவார்.
அவர் தனது காலப்பகுதியில் முறையற்ற தலைமைத்துவத்துக்கு "பைஅத்" எனும் ஆதரவை
வழங்க மறுத்த அதேவேளை, அதனை மாற்றி அமைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபாட்டார் என்பதே
வரலாறாகும். அந்த வரலாற்றில் சில கசப்பான அம்சங்களும், கலங்கமான விடயங்களும் சேர்ந்து விட்டாலும் அவரின் முன்மாதி எந்த வகையிலும் மறுத்துரைக்க
முடியாததாகும் (அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆழி முஹம்மத்).
ஹுசைன் (றழி) அவர்களின் சிறப்புமிகு முன்மாதிரியை சிரம்மேல் கொண்டு, இன்றய முஸ்லீம்
சமூகத்துக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்க முன்வருகின்றமை, தகைமை கொண்டவர்கள்
செய்யக் கூடிய மிகச் சிறப்பான நல்லமலாகும் (ஸாலிஹான அமலாகும்) என்பது யாரும் கருத்தில்
கொள்ளத்தக்க தாகும்.
கழுதை தேய்ந்து கட்டெறும் பாவதுபோல், முஸ்லீம் சமூகம் பலவீனப் பட்டுக் கொண்டு செல்வதை
தடுப்பதற்காக அத்தகையவர்கள் முன்வர வேண்டும்...! இஸ்லாதின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான
ஸகாத்தை முறைப்படி வசூலித்து ஏழைகளுக்கு முறையாக வழங்கப் படாமைக்கு முற்றுப் புள்ளி
வைக்க, அவர்கள் முன்வர வேண்டும்... சேரிகளிளும், முறையற்ற நெரிசல் வீடுகளிலும் வாழுகின்ற ஏழை மக்களுக்கு
விடிவு கொண்டுவர அவர்கள் திட்டம் நிறைவேற்ற வேண்டும்....!
... அன்று அலி (றழி) அவர்கள் யுத்தக்க கைதிகளுக்கு உரிமைகள் வழங்கி முன்மாதிரி
படைத்த மண்ணில் வாழ்கின்ற இன்றய அரபிகள், தமது நாட்டில் தொழில்புரிகின்றவர்களை அடிமைகளாக
நடத்துவதை தட்டிக் கேப்பதற்கும், கேட்காவிட்டால் குட்டிப் பணிய வைப்பதற்கும் ஒரு அரசியல்
தலைவனால் அல்லாமல் வேறு யாரால்தான் முடியும்.....................?
வருக தலைவனே முன்வருக, எம் சமூகத்துக்கு விடிவுகாலம் கொண்டு வருக.........!
அவன் வருகைக்கு வருகைக்கு முன்னாயத்தம் செய்வது யாவரதும் கடமையாகாதா.............? அதுவே சவால்கள் ஏற்படும் போது அந்த தலைவனை தனிமையில் விட்டு, பதுங்கி ஒதுங்கிக்
கொள்ளாமல், தலைவனுடனேயே பயணிக்கக் கூடிய பண்புகளை யாரும் முதற்கண்
தம்மத்தியில் முதற்கண் வளர்ந்துக் கொள்வோமாக...! (பார்க்க அல்குர்'ஆன் 3:144).
அன்று சினாய்ப் பாலை வனத்தில் சிறுமை பட்டு அலைந்து திரிந்த மூஸா நபியின் சமூகத்தினர் பிரார்தித்தது போன்று நாமும் பிரார்த்திப்போமாக.....................! (பார்க்க 2:246).