Saturday, January 22, 2022


வாழ்க்கை வளம்பெற

நிலம் வளம்பெற வேண்டுமென்றால் நீர் இறைத்தால் மாத்திரம் போதும் என நினைப்பது புத்திசாலித்தனமாகாது.  மாறாக, நிலத்தின் உண்மைத்தன்மையை அறிந்து அதற்கேற்ப மாற்றுபகாரங்கள் செய்யவேண்டும். அது கடல் சார்ந்த இடமாக இருந்தால் உவர்ப்புத் தான்மை இருக்கலாம். இல்லாவிட்டால் சுண்ணாம்பு அதிகம் இருக்கலாம். சிலபோது நீர் வடிந்தோடமுடியாத அமைப்பிலே அதிகம் நீர்பற்று உடையாகதாகவும் இருக்கலாம். இத்தகைய பல்வேறு அம்சங்களை சரியாக இனங்கண்டால் மாத்திரமே நிலத்தை எவ்வாறு வளப்படுத்துவத்துவது என்பததற்கான வழிமுறைகளைக் கண்டறியலாம். அதுபோல், வாழ்க்கையின் யதார்த்தத்தை சரியாக அறிந்து கொண்டால் மாத்திரமே அதை வளப்படுத்திடுவதற்கான வழிமுறைகளை கண்டறியலாம்.

 

வாழ்க்கையின் யதார்த்தத்தைப் பற்றியும், அதில் வந்து போகும் நிகழ்வுகள் பற்றியும் தமிழில் சொல்லப்பட்டுள்ள அளவு வேறு எந்த மொழியிலும் சொல்லப்பட்டிருக்க முடியாது எனச் சொன்னால் அது மிகையாகாது. அவைகளை தமிழ் பேசும் மக்கள் அறியாமல் இருக்கவும் முடியாது. எனவே ஞாபகப்படுத்தலுக்காக அது பற்றிய ஓரிரு விடயங்கள் மாத்திரம் இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.

 

"எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி" என உலகிலே நிம்மதியை தேடிய கவிஞன் "கண்ணைப் படைத்து, பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே" என ஒருமுறை கடிந்து கொள்கிறான். "வந்து பிறந்துவிட்டோம் ஆனால் வாழத் தெரியவில்லை" என இன்னொரு முறை அங்கலாய்க்கிறான். கடைசியாக "ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா" என அலுத்துக் கொள்கிறான். இவைகள் பொதுவாக எல்லாருக்கும் பரீட்சயமானவை ஆதலால் அவை இங்கு தொட்டுக்க காட்டப் படுகிறது. இவைகளல்லாமல் தமிழ் இலக்கியத் தொகுப்புகளில் இதுவிடயமாக ஏராளமான வியடங்கள் காணப் படுகின்றன. அவ்வாறே, உலக வாழ்க்கை பற்றி பேசுகின்ற திருக்குர்'ஆன், மூன்று முறை சத்தியம் செய்து மனித வாழ்க்கை என்பது கவலைகளும் சஞ்சலங்களும் நிறைந்ததே என்று ஒருமுறையும் (90:1-4), உலக வாழ்க்கை என்பது சோதனைகள் நிறைந்ததொன்று  என்று இன்னும் பல்வேறு இடங்களிலும் சொல்கிறது (2:155, 47:31, 67:2).

இத்தகைய சோதனைகளையும், பிரச்சினைகளையும் கடந்து செல்ல மனிதன் முயற்சிப்பது இயல்பே. அவ்வாறு முயற்சிக்கின்ற பொழுதுதான் வளம் பற்றிய தேவை ஏற்படுகிறது.  வளங்கள் வரையறுக்கப்பட்டன  என்பது பொது விதி. ஆனால் அந்த வளத்தைப் படைத்த இறைவனுக்கோ அது விதிவிலக்காகும்.

 

வாழ்க்கையில் வளங்கள் அதிகரிக்க திருக் குர்'ஆன் கூறும் ஆலோசனை என்னவெனில் "நீங்கள் (இருக்கின்ற வளங்களுக்காக) நன்றி செலுத்தினால், நாம் மேலும் (வளங்களை) அதிகரித்துக் கொடுப்போம்" (14:7) என்பதாகும். அதற்கிணங்க மனித வாழ்க்கையில் பிரச்சினைகள் இருப்பது பொது விதி. அந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் ஒருவன் தன்னிடம் இருக்கின்ற வளங்களுக்காக நன்றி செலுத்துவதே மேலும் வளங்கள் பெறுக காரணமாக அமைகிறது என்பதே திருக் குர்'ஆனின் போதனையாகும்.

 

மனிதனிடத்தில் காணக்கூடிய மிகக் கெட்ட குணங்களில் ஓன்று நன்றிகெட்ட தனமே என திருக் குர்'ஆன் மூன்று முறை சாத்தியமிட்டுக்  கூறுகிறது (100:1-6). இன்னோரிடத்தில் "மனிதன் அழிந்து போகட்டும். அவன் எவ்வளவு நன்றி கெட்டவனாக இருக்கிறான்" (80:17) எனச் சொல்கிறது. இதற்கு மாற்றமாக ஒருவன் நன்றியுள்ளவனாக இருப்பது அவனது அருள்கள் அதிகரிக்க காரணமாக அமைகிறது என்பதை மேலே கண்ட திருக் குர்'ஆன் வசனம் எடுத்தியம்புகிறது.      

 

ஒரு மனிதன் தனக்கு எவ்வளவு தான் வளங்கள் குறைந்துபட்டுப் போயுள்ளது எனக் கணக்கிட்டாலும், அவனிடத்தில் ஏலவே இருக்கின்ற வளங்கள் எண்ணிக் கணக்கிட முடியாதவை என திருக் குர்'ஆன் போதிக்கிறது (17:34). அந்த வளங்களுக்காக நன்றி செலுத்துவதே மேலும் அதிக வளங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வழிமுறையாகும்.  

 

அதற்கமைய, எவ்வாறு நன்றி செலுத்துவது எனும் அம்சம் சற்று பறந்து பட்டதாகும். அது விடயமாக பேசுகின்ற திருக் குர்'ஆன் "ஆதரவற்ற அனாதைகள் மீது கடிந்து கொள்ளாதே, கேட்டு வருகின்றவர்களை கடிந்து விரட்டதே. உமதிறைவன் அளித்துள்ள வளங்களைப் பற்றியே பேசுவாயாக" (93:6-11) எனும் அம்சங்களை போதிக்கிறது.

 

"அநாதைகளைக் கடிந்து கொள்ளாதே" எனும் போதனையை சுருக்கமாக நாம் விளங்கிக் கொள்வதென்றால், அனாதைகள் மீது இரக்கம் காட்டுவது எனக் கூறலாம். அவ்வாறே உதவி கேட்டு வருகின்றவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளல் மற்றும் தன்னிடத்தில் இருக்கின்ற குறைகளைத் தவிர்த்து அருள்களைப் பற்றியே பிறருடன் கலந்துரையாடுவது ஆகியன நன்றி செலுத்தும் சில வழிமுறைகளாகும் என நாம் விளங்கிக் கொள்ளலாம்.

 

வாழ்க்கையில் வளம் பெறுக வழிசொல்லும் முஹம்மத் நபி அவர்கள் "யார் தனது வாழ்க்கையில் வளங்கள்  பெறுக  விரும்புகிறாரோ அவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து நடக்கட்டும்" என போதித்துள்ளார்கள் (புஹாரி, முஸ்லிம்). அதற்கமைய உறவினர்களுக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்து அவர்களுடன் சேர்ந்து நடப்பதும் நன்றி செலுத்தும் இன்னொரு வழிமுறையாகும்.

 

ஒரு மனிதன் தனது புதிய நாளை எவ்வாறு ஆரம்பிப்பது எனச் சொல்லித் தரும் இறைத்தூதர் அவர்களின் வழிகாட்டலுக்கிணங்க, தூக்கத்திலிருந்து எழும்போது "எனக்கு உயிர்தந்து எழச்செய்த இறைவனுக்கே நன்றிகள் உரித்தாகட்டும்" எனும் மந்திரத்தை உச்சரிப்பது முறையாகும். (ஹம்த் எனும் அரபிச்  சொல் நன்றி செலுத்தல் எனும் கருத்தையும் உள்ளடக்கும் எனும் விடயம் விரிவு கருதி விளக்கப்படுவது இங்கு தவிர்த்துக் கொல்லப் படுகிறது). இந்த வழிமுறையில் தெளிவாகவே நன்றி எனும் அம்சம் சொல்லப் பட்டிருப்பதைக் காணலாம்.   

 

இப்படியாக ஒருவன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் நன்றி செலுத்துவதில் உள்ள தாத்த்பரியங்களை மாத்திரம் விளக்குவதற்கு பல புத்தகங்கள் எழுத வேண்டி வரும். அது பற்றி சுருக்கமாக ஒருவிடயம் அவசியம் கருதி சுட்டிக்காட்டப் படுகிறது. பொதுவாக ஒரு மனிதன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் நேற்றய தினத்தின் கசப்பான நினைவுகள் அவனை ஆற்கொள்ளலாம். அந்நிலையில் அவன் இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது அவனது கவலைகள் நீங்கி புதுத்தெம்புடன் அந்த நாளை அவன் ஆரம்பிக்க அது துணைபுரிகிறது. இந்த அம்சம் ஒருவன் வாழ்க்கையின் ஏனைய சந்தர்ப்பங்களிலும் நன்றி உடையவனாக இருக்கும்போது அவனுக்கு அது பல வழிகளிலும் பலனளிக்கிறது என்பதை நிரூபிப்பதாக அமைந்துள்ளமை ஈண்டு கவனிக்கத் தக்கதாகும்.

 

அவ்வாறே, ஒரு மனிதன் நன்றி செலுத்தக் கூடிய வழிமுறைகளில் மற்றொன்றுதான் இறைவனைத் தொழுவதாகும். "நீங்கள் பொறுமையைக் கொண்டும், தொழுகையூடாகவும் உதவி தேடுங்கள்" (2:45) எனும் திருக் குர்'ஆனின் போதனை, வளங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் எனத் தெளிவாக சொல்லாவிட்டாலும் கூட அதன் மறுபக்கமான பிரச்சினைகள் நீங்க வழிவகுக்கும் என்பதை உணர்த்துகிறது. அதனடிப்படையில் பிரச்சினைகளைப் போக்கிக் கொள்ளப் போதிய வளங்கள் இல்லையே என அங்கலாய்க்கின்ற ஒருவன் தொழுது நன்றி செலுத்த்துகின்ற பொழுது அவனது உள்ளம் தெளிவு பெற்று பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள  புது வழிகள் பிறக்கலாம் அல்லது வேறு வழிகளில் அவனது வளங்கள் அதிகரிக்கலாம் என்பதை விளங்கிகிக் கொள்ளலாம். இத்தகைய  நன்றி செலுத்தும் பலநூறு வழிமுறைகள் திருக்குர்'ஆன் போதனைகளிலும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டலிலும் நாம் கண்டுகொள்ளலாம். அவைகள் சொல்லப் படுவது இங்கு சுருக்கம் கருதி தவிர்த்துக் கொல்லப்படுகிறது. அவைகளைப் பின்பற்றி ஒரு மனிதன் நன்றியுடைவனாக வாழப் பழகுவது அவனது வாழ்க்கையில் வளங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என்பதை விளங்கிக் கொள்ளலாம். அத்துடன், மனித வாழ்க்கையில் வளங்களின் தேவைகளை உருவாக்கும் பிரச்சினைகள் பற்றியும் சற்று விளங்கிக் கொள்வது இச்சர்ந்தர்பத்தில் சாலப் பொருத்தமாகும்.

 

மனித வாழ்க்கை, பிரச்சினைகள் நிறைந்ததாக  அமைவதற்கு இறைவனின் படைப்புகளான இப்பூமியில் ஏற்படும் அனர்த்தங்களும், அழிவுகளும் முக்கிய காரணிகளல்ல. மாறாக, மனிதனினின் தவறுகளே முக்கிய இடம் வகிக்கின்றன.

 

இவ்வாறு மனிதன் என்பவன் தவறிழைக்கூடிய ஒரு படைப்பிணம் என்பதை புத்திக்கு எட்டக் கூடிய அமைப்பிலே விளக்குவதாக திருக் குர்'ஆன் எடுத்தியம்பும் ஆரம்ப மனிதன் ஆதமின் வாழ்க்கைச் சரிதை அமைந்துள்ளமை,  தெரிந்து தெளிந்து வியக்கத்தக்கதாகும். இறைவனின் வல்லமையினால் படைக்கப்பட்ட முதல் மனிதன் ஆதாமுக்கு, தகவல்லறிவு கொடுக்கப்படுகிறது. அத்துடன் தெரிவுச் சுதந்திரமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு தகவல் அறிவு பெற்ற ஆதாமுக்கு ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனிகளை சாப்பிடக் கூடாது எனும் கட்டளையும் வழங்கப் படுகிறது. ஆனால் ஆதாமுக்கு கட்டளைக்கு மாறு செய்தால் என்ன நடக்கும் எனும் எதிர்கால அறிவு இருக்கவில்லை. ஆதலால் பகுத்தறிவு எனும் தெரிவுச் சுதந்திரம் உள்ள ஆதாம் இறைவனின் கட்டளைக்கு மாறாக அந்தக் கனியை சுவைத்து தவறு செய்கிறார்.  பின்னர் அவர் பூமியில் வாழ அனுப்பப் படுகிறார் என அந்த வாழ்க்கைச் சரிதை சொல்கிறது (2:30-38; 20:116-123).

 

இந்த வரலாற்றினூடாக திருக்குர்'ஆன் போதிக்கும் முக்கிய விடயம் என்னவெனில், மனிதன் தனது அறியாமை காரணமாக தவறு செய்யக் கூடியவன் என்பதாகும். இதே விடயத்தை நிரூபிப்பதாகவே ஆதாமின் பிள்ளைகள் இருவருக்கு மத்தில் ஏற்பட்ட பிணக்கும் அமைந்திருப்பதைக் காணலாம். அது பற்றி சுருக்கமாகச் சொன்னனால் ஆதாம் தனது முற்பிறவியிலே இறை சன்னிதானத்தில் வாழும்பொழுது செய்த தவறை அவரது சந்ததி இவ்வுலகிலே செய்தனர் எனலாம். அவ்வாறு தவறு செய்வது பெருங்குற்றமல்ல, மாறாக தவறை உணர்ந்தபோது அதைத் திருத்திக்கொள்ளத்  தவறுவதே பெருங்குற்றமாகும் என்பது சந்தர்ப்பம் கருதி ஈண்டு சுட்டுக் காட்டப் படுகிறது (பார்க்க திருக்குர்'ஆன் 25:70). இவ்வாறான தவறுகள் காரணமாகவும் இன்னும் பல அம்சங்கள் காரணமாகவும், உலக வாழ்க்கை என்பது சிக்கல்களும், குழப்பங்களும், பிரச்சினைகளும், கஷடங்களும் நிறைந்த தொன்றாக அமைந்துள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

 

அதற்கிணங்க, வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க எப்பொழுதும் தயாராக இருப்பது முதல் படியாகும். அடுத்து வாழ்க்கை என்பது பிரச்சினைகள் நிறைந்தது என்பதை நினைவில் கொண்டு பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ளவும், தவிர்ந்து கொள்ளவும் நாட வேண்டும். ஒரு சிறு பிரச்சிணை உருவாகும்போது உணர்ச்சிவசப்பட்டு, கவனயீனமாக நடந்து கொண்டால் அது பெருத்து பூதாகரமாக உருவெடுக்க வாய்ப்புண்டு. இவ்வாறாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க தாயார் நிலையில் இருப்பதும், பிரச்சனைகளை இயன்றளவு தவிர்த்து வாழ்வதும், வாழ்க்கையில் ஒருவன் நண்றியடைவனாக வாழ்வதற்கு துணைசெய்யும் காரணிகளாகும் என்ற வகையில் இந்த விடயம் இங்கு மிகச் சுருக்கமாக தொட்டுக்க காட்டப் பட்டுள்ளது. அவ்வாறே கஷ்டங்களுக்கு மத்தியிலும் உளத்திருப்தியுடன் வாழ்வதும் ஒரு மானிதான் நன்றியுடையவனாக இருக்க துணை செய்யும் மறறொரு அம்சமாகும். அரபியில் "றிழா" என அழைக்கப் படும் இந்த அம்சம், இஸ்லாம் போதிக்கும் முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாகும்.  அத்துடன் இஸ்லாம் போதிக்கும் "ஈமான்" (நம்பிக்கைக்கு கோட்பாடு) எனும் விடயத்தில் அடக்கும் "கத்ர்" (விதி) பற்றிய நபிக்கையும் நன்றியுடன் வாழல் எனும் அம்சத்துடன் தொடர்புபட்டதே. இவைகள் பற்றியும் விளக்குவது, விரிவு கருதி இங்கு தவரித்துக் கொல்லப் படுக்குறது.

 

இப்படியாக ஒரு மனிதன் உலக வாழ்க்கையின் யதார்த்தத்தை விளங்கி, தனக்கு கொடுப்பட்டுள்ள அருள்களுக்கு நன்றியுடைவனாக இருப்பதே அந்த அருள்கள் மேலும் அதிகரிக்க காரணமாக அமையும் ஆதலால் எப்பொழுதும் யாருக்கும் நன்றியுடைவனாக வாழ்வது இவ்வுலகிலே வளம்பெற்று வாழத் துணைசெய்யும் அதே வேளை மறுஉலகிலும் ஈடேற்றம் பெற்றுத்தரும் அம்சம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.   

 

அத்துடன் சிறுபான்மை இனமாக வாழக் கூடிய முஸ்லீம்கள், தமக்கு வாழ்க்கையில் கிடைக்கப் பெற்றுள்ள பொதுவான நலன்களுக்காக தான் வாழும் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றியுடையவர்களாக இருப்பது அவர்களின் மார்க்கக்கடமை என்பதை உணர்ந்து அவ்வப்போது ஏற்படும் அசெளகாரியங்களையம் சில உரிமை மீறல்களையும் பொறுமையுடனும் மார்க்கத்தின் வழிகாட்டல்களுக் கிணங்கவும் கையாளப்  பழகிக் கொள்வதுடன், இதுவிடயமாக சிறந்த மார்க்க அறிஞர்களின் வழிகாட்டல்களைப் பெற்று அதனடிப்படையில் செயற்படவேண்டும் எனும் விடயம் சந்தர்ப்பம் கருதி இங்கு ஞாபகப் படுத்தப்படுகிறது. 

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...