இன்னும் கொஞ்சம்
ஒரு சாதாரண உருவகக் கதையொன்று
உண்டு. அதில் ஒரு நொண்டி தனது இயலாமையை நினைத்து வருந்தியவன்னம் நினைக்கிறான், தனக்கு இரண்டு கால்களும்
நன்றாக இருந்தால் மற்றவர்களை போல் நடக்கலாம் அல்லவா என்று. ஏதோ ஒரு அமைப்பில் அவனுக்கு
நடக்க முடிகிறது. அவன் மகிழ்ச்சியாக பாதையில் நடந்து செல்கிறான். அப்பொழுது ஒரு சைக்கில்
வண்டியில் லாவகமாக ஒருவன் போவதை பார்க்கிறான். தனக்கும் அவ்வாறு
ஒரு சைக்கிள் வண்டி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என எண்ணுகிறான். எதோ ஒரு அமைப்பில் ஒரு சைக்கிள் வண்டியும் கிடைத்துவிடுகிறது.
அவன் அந்த சைக்கில் வண்டியில் போகின்ற பொழுது, ஒரு மோட்டார் சைக்கிள் அட்டகாசமாக அவனை
கடந்து செல்கிறது. அதனைப் பார்த்தவுடன் அவனுக்கு அந்த மோட்டார் சைக்கிள்மீது ஆசை வந்து
விடுகிறது என அந்த கதை தொடர்ந்து கொண்டே போகும். இது மனிதனின் இயல்பை தத்ரூபமாக சித்தரிக்கும்
ஒரு உருவகக் கதையாகும். இந்த மனித இயல்பை அல்குர்'ஆன் இவ்வாறு சித்தரிக்கிறது:
“இன்னும் கொஞ்சம் தேடுவோம், இன்னும் கொஞ்சம் தேடுவோம்
எனும் தேடல் உங்களை புறக்கணிக்கச் செய்துகொண்டே இருந்தது. நீங்கள் புதைகுழியை அடையும்
வரை உங்களை அது புறக்கணிக்கச் செய்து கொண்டே இருந்தது” என்று கூறுகிறது (102:1-2).
இந்த கொரோனா யுகத்தை ஒரு மைல் கல்லாகாக் கொண்டு தனது கடந்த காலத்தை கொஞ்சம் மீட்டிப்
பார்த்தல், தான் வந்த பாதை எவ்வாறிருந்தது என்பது ஒவ்வொருவருக்கும்
நன்கு புரியும். அதுவரைக்கும் எத்தனை ஓட்டம். எவ்வளவு முயற்சி. எத்துனை திட்டங்கள்.
எவ்வளவோ கற்பனைகள். எல்லாவற்றுக்கும் நங்கூரம் இட்டாற்போல் ஒரு நிகழ்வு. அதுதான் கொரோன-19
எனும் வைரசின் தாண்டவமாட்டமாகும். அதைத்தொடர்ந்து எல்லாம் ஸ்தம்பிதம். சந்திரக் கிரகணம் ஏற்பட்டபோது
பறவைகள் செய்வதறியாது கூடுகளில் போய் அமர்ந்து கொண்டதைப் போல், எல்லாரும் வீடுகளில் சிலகாலம் அடைபட்டுக் கிடந்தனர்.
இந்த ஒரு வருடகாலத்திலும் நடக்கவேண்டிய எதுவும் நடக்காமல் இருக்கவில்லையே. திருமண
நிகழ்வுகள் நடந்தேறின. மரணித்தவர்கள் முறையாக அடக்கம் செய்யப்பட்டனர். பொருட்கள் வாங்கலும்
விற்றாலும் நடைபெற்றது. உணவு தயாரித்து உற்கொள்ளப்பட்டது. பெருநாள் கொண்டாடப்பட்டது,
ஏனைய மருத்துவத் தேவைகள் நிறைவேற்றப்பட்டன. இன்னும் எத்தனையோ அம்சங்கள் எல்லாம் நடந்தேறின.
ஆனால் ஒருசில வித்தியாசங்கள் மாத்திரம் இருந்தன. அவைகளாவன: முன்னரைப் பார்க்கிலும்
செலவுகள் குறைவு. முன்னரைப் பார்க்கிலும் ஒய்வு அதிகம். இப்படியாக நிர்ப்பந்தம் ஏற்படும்
போதெல்லாம் கொஞ்சம் நிதானித்து செயல்படவும், கொஞ்சம் ஓய்வாக இருக்கவும்
முடிந்த மனிதனுக்கு தனது மரணத்தின் பின்னதான வாழ்க்கைக்காக கொஞ்சம் செயல்பட நேரம் கிட்டுவதுமில்லை.
செலவு செய்ய பணம் எஞ்சுவதுமில்லை. அந்த மரணத்தின் பின்னதான ஒரு நிகழ்வையே இன்னும் கொஞ்சம் தேடுவோம் எனும் தேவை புறக்கணிக்கச்
செய்ததாக மேற்சொன்ன குர்'ஆன் வசனம் போதிக்கிறது.
அது என்ன நிகழ்வு? அதுவே யாரும்
நரக நெருப்பை காணத்தான் போகின்றனர் என்பதாகும். அது தனக்கு முன்னாள்
இருக்கின்ற நிலையில் தனக்கு வழங்கப்பட்ட அருள்களை பற்றி கேள்விகணக்கு கேற்கப்படத்தான்
போகிறது என்பதுமாகும். இந்த விடயத்தை, தொடர்ந்து வரும் அல்குர்'ஆன் வசனங்கள் ஞாபகமூட்டுகின்றன (102:5-8). அதன்பின்னர் தனக்கு இரண்டாவதாக ஒரு வாய்ப்பு
அமையப் பெறாது. எந்தவிதமான சலுகையோ,
மன்னிப்போ கிடைக்கப் பெறாது.
அந்த நரகைப் பற்றி கொஞ்சம்
தெரிந்து கொள்வது இந்த இடத்தில் சாலப் பொருத்தமாகும். ஒரு மனிதன் எதிர்பாராமல் ஒரு
துன்பத்தில் அகப்படுவதற்கும் தெரிந்துகொண்டே ஒரு துன்பத்தில் வீழ்வதற்கும் வித்தியாசமிருக்கிறது.
எதிர்பாராமல் கை வெட்டிக்கொண்டால் அது பெரும் வெட்டாக இருந்தாலும்கூடாக வலி பின்னராகத்தான்
தெரியும். ஆனால் மருந்து ஊசி போடப்படப் போவது ஒரு சிறு வலியாக இருந்தாலும் போடும் வரைக்கும்
பெரும் வலியாகத் தென்படும். இதுபோன்ற ஒரு நிலையை ஒத்ததே மறுமை நாளில் நரகில் வீழ்வதுமாகும்.
மஃசர் மைதானத்தில் கேள்வி கணக்கு கேட்கப்படும் வரைக்கும் நரக நெருப்பின் காங்கையை எல்லோரும்
அனுபவிப்பர். அதன் சீற்றத்தை கேற்பர் (25:12) அதன் பிரமாண்டமான சுவாலைகள் மேலெழுந்து
பறப்பதை காண்பர் (77:32). இப்படியாக அந்த நரகத்தின் கொடூரத்தைக் கண்ட பிறகும் அதில்
போய் விழும் நிலை ஏற்படுவது எத்துணை பயங்கரமானது என்பதை கொஞ்சம் நிதானித்து சிந்தித்துப்
பார்த்தல் கொஞ்சமாகப் புரியும். அதற்கு அப்பால் இருக்கும் தண்டனைகள் அதில் வீழ்ந்த
பின்னர்தான் வழங்கப்படும். இப்படியான கண்கூடான ஒரு வேதனைக்குரிய இடமே நரகம் என்பதால்தான்,
அந்த வேதனைகள் பாவிகளுக்கு சுவைக்கச் செய்யப்படும் என்று அல்குர்'ஆன் கூறுகிறது (44:49, 7:39)
இத்தகைய கடும் வேதனைகளை விட்டும்
இறைவிசுவாசிகளை பாதுகாப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இந்த கொரோனா எனும் சோதனைக்காலம்
அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. உலகத்திலே ஒரு அனர்த்தம் அல்லது ஒரு துன்பத்துக்குரிய
நிகழ்வு நிகழும் பொழுது அது இறைவிசுவாசிகளுக்கு நன்மை பயப்பதாகவும், ஏனையவர்களுக்கு
வேதனையாகவும் அமையும் என்பது ஒரு பொது விதியாகும். அதனடிப்படையில் இந்த கொரோனா எனும்
நோய் தோற்றலைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் இறை விசுவாசிகளை மரணத்தின் பின் ஏற்படும்
பயங்கரங்களிலிருந்து பாதுகாக்கக் கூடியதொரு அருளாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு
இடமிருக்க முடியாது (பார்க்க அல்குர்'ஆன் 32:21).
இவ்வாறாக இந்த கொரோனா யுகத்திலிருந்து
படிப்பினைகள் பல பெற்று எமது எதிர்கால நடவடிக்கைகளை நாம் செப்பனிட்டுக் கொள்வதே எல்லா
வகையிலும் பொருத்தமானதும் சிறந்ததுமாகும். இந்த கொரோனா யுகத்தில் எமது தேவைகளை வரையறுத்துக்
கொள்ளப் பழகினோம். அது எமக்கு அதிக ஓய்வைக் கொண்டு தந்ததைக் கண்டு கொண்டோம். அந்த ஓய்வை அல்லாஹ்வின் கட்டளைகளைத்
தெரிந்து தெளிவுபெற பயன்படுத்திக் கொண்டோம். எமது கையிருப்பிலுள்ள அனைத்தையும் செலவு
செய்தோம். அதனால் நாம் அழிந்து விடாமல் இன்னமும் உயிர்வாழ்வதை உணர்ந்து கொண்டோம். அப்படியே
நாம் மறுமைக்காக செலவு செய்வதனாலும் நாம் அழிந்துவிடப் போவதில்லை என்பதை தெரிந்து கொண்டோம்.
இன்னும் எமது உறவினர்கள், குடும்பம் என பல்வேறு அம்சங்களின் பெறுமதியை உணர்ந்து
கொண்டோம்.
இப்படியாக இந்த கொரோன-யுகம் அவரவருக்கு கற்றுத்தந்த
பாடங்களை தனித்தனியாகத் தெரிந்து கொள்ளும் நிமித்தம், கடந்து வந்த காலங்களை மீட்டிப்
பார்ப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை இந்த ரமளான் நோன்பு காலம் எமக்கு தந்திருப்பது யாரும்
கருத்தில் கொள்ளத்தக்கதாகும். அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மறுமையில் ஏற்படக்
கூடிய நிரந்தர துன்பத்திலிருந்து எம்மையும் பிறரையும் பாதுகாத்துக் கொள்ள சிந்தித்து
செயல்படுவோமாக.
No comments:
Post a Comment
We value your feed back