Friday, January 21, 2022

தெஹ்ரிக் ஏ ஈமான்”

நான்காம் கலீபா அலி (றழி) அவர்கள் மரணித்து 55 வருடங்கள் கழிந்த நிலையில் “மர்வான் பின் அப்துல் மாலிக்” எனும் உமையா கலீபாவின் காலத்தில் (கி.பி. 712) முதன் முதல் இந்தியாவை நோக்கி முஸ்லீம்களின் படையெடுப்பு ஆரம்பித்தது. அதற்கு முன்னர் கலீபா அபூபக்கர் மற்றும் உமர் (றழி) அவர்களின் காலத்திலேயே இஸ்லாம் மார்க்கம் பற்றிய செய்தியை அறிந்துகொண்ட இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த பல்வேறு அரசர்களும், தனிநபர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. இவ்வாறு இந்தியத் துணைக்கண்டத்தில் அறிமுகமான இஸ்லாம் கிபி 1500 களில் ஆரம்பித்த முகலாய ஆட்சிகாளத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்ற வல்லரசாக வளர்ந்தமையை வரலாற்றினூடாக கண்டுகொள்ளலாம். குறிப்பாக சக்கரவர்த்தி “அவ்ரங்கசீப்” அவர்களின் ஆட்டசிகாலப் பகுதியில் “ஷாஹ் வலியுல்லாஹ்” அவர்களின் தந்தையாகிய “ஷாஹ் அப்துல் அஸீஸ் தெஹ்லவி” அவர்களின் தலைமையில் ஷரீ'ஆ அடிப்படையிலான சட்டக்கோவையொன்று உருவாக்கப்பட்டு அரசினால் அமுலுக்கு கொண்டுவரப்பட்மை குறிப்பிடத்தக்கதாகும். இந்த காலப் பகுதிகளில் இஸ்லாமிய உலகில் “தரீக்களின்” செல்வாக்கு வியாபித்துக் கொண்டிருந்தது. தரீக்காக்கள் ஷீ'ஆ கொள்கையிலிருந்து முஸ்லீம்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயற்பட்டாலும் கூட, இஸ்லாமிய அரசின் செயல்பாடுகளிலும் அவர்களின் பங்களிப்பு கணிசமானளவு இருந்தது. ஷீ'ஆக்கள் எகிப்திலே “அல்'அஸ்ஹர்” பல்கலைக் கழகத்தை உருவாக்கியதைப் போலவே இந்தியாவில் பல்வேறு மத்ரஸாக்கள் தரீக்கா அங்கத்தவர்களால் உருவாக்கப் பட்டன. அதே தொடரில் இலங்கையிலும் மத்ரஸாக்கள் உருவாக்கப்பட்டதுடன், கொழும்பு “ஸாஹிரா” கல்லூரி உட்பட இன்னும் பல பாடசாலைகள் தோன்றுவதற்கும் “தாரீக்கா” அங்கத்தவர்கள் காரணமாக இருந்தமையைக் காணலாம். அவ்வாறே “நளீமியா” கலாசாலையும் தாரீக்காவின் செல்வாக்குமிக்க பேருவளை நகரில் அமையப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

இவ்வாறு உருவாக்கப்பட்ட மத்ரஸாக்களுள் "தாருல் உலூம் தேவ்பந்த்" முக்கியமானதாகும். இதை உருவாக்குவதில் பாடுபட்ட "முஹம்மத் காஸிம் நநோடாவி" மற்றும் "ராஷித் அஹ்மத் கங்கோஹி" ஆகியோர் முறையே அபூபக்கர் (றழி) மற்றும் "அபூ அய்யூப் அல்  அன்சாரி" (றழி) ஆகிய சஹாபாக்களின் வம்சாவளியைச் சேர்த்தவர்கள் எனக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

 

கி.பி.1800 களில் உள்நாட்டு கிளர்ச்சிகள் மற்றும் ஆங்கிலேயரின் ஆதிக்கம் காரணமாக “மொகலாய” அரசின் ஆதிக்கம் வீழ்ச்சியடைய ஆரம்பித்த காலத்திலே துருக்கிய "கலீபா" வின் செல்வாக்குப் பிரதேசத்தை விஸ்தரிக்கும் நோக்குடன் இந்தியாவில் "கிலாபத்" இயக்கமென்று உருப்பெற்றிருந்தது. இந்நிலையில் மொகலாய அரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து "ஷாம்லி" எனும் பிரதேசத்திலே ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை விட்டும் விடுபட்ட தனியான நிர்வாக அலகொன்று  உருவாக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த முயற்சி துருக்கிய மற்றும் ஜெர்மனியின் உதவியுடன் மேற்கொள்ளப் பட்டதாகவும் சில தகவல்கள் உண்டு. இதை அறிந்த ஆங்கிலேயர்கள் இப்பிரதேசத்தின் மீது தாக்குதல் தொடுத்து அதை முறியடித்தனர். இச்சம்பவத்தில் 2 இலட்சம் பேர் கொல்லப் பட்டத்துடன், அதில் ஐம்பதுனாயிரம் பேர் ஆலிம்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த முயற்சியை வழிநடாத்திவர்களில் ஒருவரான "மஹ்மூத் ஹஸன்" அவர்கள் மக்காவில் கைது செய்யப்பட்டு பிரித்தானியரிடம் ஒப்படைக்கப் பட்டார் எனும் விடயம் அரபிகளும் இதற்கு எதிராக செயற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. இந்தப் போருக்கும் “கிலாபத்” இயக்கத்துக்குமான தொடர்பு பற்றி அறியக் கிடைக்காவிட்டாலும் கூட, போரை வழிநடத்திய முக்கிய தலைவர்களில் ஒருவரான "மஹ்மூத் ஹஸன்" அவர்கள் துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இந்தப் போருடன் சம்பந்தப்பட்ட மற்றொரு தலைவர் "ராஷித் அஹ்மத் கங்கோஹி" ஆவார்.  இவர்கள் இருவரிடத்திலும்  கல்வி கற்று பின்னர் அதே "தேவ்பந்த்" மத்ரஸாவில் தனது கற்கைகளை தொடர்ந்தவரே இல்லியாஸ் (றஹ்) ஆவார். அதிலும் குறிப்பாக இல்லியாஸ் (றஹ்) அவர்கள் "ராஷித் அஹ்மத் கங்கோஹி" அவர்களின் வீட்டில் தங்கி கல்வி கற்றார் என்பதும் "ராஷித் கங்கோஹி" அவர்கள் ஸஹாபாக்களின் வம்சாவளியில் வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.  

 

“தாருல் உலூம் தேவ்பந்த்” மத்ரஸாவில் தனது கற்கைகளை முடித்துக்கொண்ட “இல்லியாஸ்(றஹ்) அவர்கள், தனது தந்தை கற்பித்த மத்ரஸாவில் பாடம் கற்பிக்கும் பணியை தொடர்ந்தார்கள். அவ்வாறே தனது தந்தை முஹம்மது இஸ்மாயில் அவர்களின் பிரியர்களின் அழைப்பின் பேரில் “மேவாத்”  பிரதேசத்தில் (தரீக்கா நிகழ்வில்) மார்க்கப் பிரசங்கம் செய்யும் பணியையையும் மேற்கொண்டார்கள். இவ்வாறு, தான் சென்று வருகின்ற “மேவாத்” பிரதேச மக்களிடத்தில் காணப்பட்ட அறியாமையைப் போக்கும் எண்ணத்தில் அப்பகுதியில் “மக்தப்” அமைப்பை நிறுவி முயற்சிகள் மேற்கொண்டார்கள். அந்த முயற்சியும் எதிர்பார்த்த பலனை தராததை உணர்ந்த நிலையில் ஒரு ஹஜ் பயணத்தை மேற்கொண்டார்கள். அந்த ஹஜ் பயணத்தின் போது தனக்கு கிடைத்த சில தெளிவுகளின் பிரகாரம் தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்தார்களா அல்லது தான் ஏற்கனவே உணர்ந்த ஒரு வழிமுறையை பரக்கத் கருதி ஹஜ் பயணமொன்றை மேற்கொண்ட பின்னர் ஆரம்பித்தார்களா என்பது பற்றிய தெளிவுகள் கிடைக்கவிட்டாலும்கூட, அவர் இரண்டாம் முறை ஹஜ் கடமையை நிறைவேற்றிய பின்னர், நீண்ட நாட்கள் மதீனாவில் தங்கிவிட்டு வந்து தனது பிரச்சார பணிகளை ஆரம்பித்தார்கள் என்பதாக அறிந்து கொள்ளலாம். அவ்வாறே தனது ஆசிரியரான "ராஷித் அஹ்மத் கங்கோஹி" அவர்களின் மரணமும் இல்லியாஸ் (றஹ்) அவர்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அறியக் கிடைக்கிறது. அந்தவகையில் அவரது மரணமும் எதோ ஒரு வகையில் இல்லியாஸ் (றஹ்) அவர்கள்  தனது பணியை ஆரம்பிக்கத் தூண்டியதாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு, தான் ஆரம்பித்த பணிக்கு “ஈமானிய இயக்கம்” (தெஹ்ரிக் ஏ ஈமான்) எனும் பெயரை நாடியிருந்தாலும்  கூட, பொதுமக்கள் மத்தியில் அது “தப்லீக் ஜமாத்” என்பதாக பிரபல்யம் அடைந்தது.  

 

“இல்லியாஸ்” (ரஹ்) அவர்கள் பிறந்த ஊர் முஸ்லீம்கள் ஆங்கிலேயர்களுக்கெதிராக போர் தொடுத்த அதே "ஷாம்லி" பிரதேசத்தில் அமைந்திருப்பதும்,  அந்தப் போருடன் தொடர்புடைய முக்கிய தலைவர்களான "மஹ்மூத் ஹசன்" மற்றும் "ராஷித் அஹ்மத் கங்கோஹி" ஆகியோருடன் நெருக்கிய தொடர்பு கொண்டவர் என்பதும், அதே "தேவ்பந்த்" மத்ரஸாவில் கல்வி கற்றவர் என்பதும் இல்லியாஸ் (ரஹ்) அவர்கள் எத்தகையதொரு பின்னணியில் வளர்ந்தவர் என்பதையும் எத்தகையதொரு சமூக சீர்திருத்தத்தை எதிர்ப்பார்த்தார்கள் என்பதையும் உணர்த்துவதாக உள்ளது. அவ்வாறே இல்லியாஸ் (ரஹ்) அவர்கள் ஹனபி மத்தகப்பைச் சார்ந்தவர் என்பதும், "தேவ்பந்" மத்ரஸா இந்தியாவில் சுந்தந்திரப் போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து முதலீடு செய்து ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க இன்னும் சில அம்சங்களாகும். சுதந்திரம் பெறுவதற்காக சாத்வீக வழியில் போராட்டம் மேற்கொண்ட பல்வேறு அரசியல் இயக்கங்களுக்கு மத்தியில் "தெஹ்ரிக்" எனும் வார்த்தையைப் பயன்படுத்தி "ஈமானிய இயக்கம்" ஆரம்பித்தம்மை "இல்லியாஸ்” (ரஹ்) அவர்களின் அரசியல் நோக்கத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளதா எனும் சந்தேகத்தையும் எழுப்புவதாக உள்ளது. இத்தகைய பின்புலன்களுடன் ஆரம்பிக்கப்பட்ட "ஈமானிய இயக்கம்" இன்றிருக்கின்ற நிலையைப் பார்த்தல் "கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியது" என்று சொல்வதும் போதாது எனலாம். தற்கால “தப்லீக்” ஜமாத்தின் நிலையை சுருக்கமாகச் சொல்வதென்றால் அன்று பள்ளிவாயலுக்கு வெளியே மார்க்க முரணான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் பள்ளிவாயலுக்குள் கொண்டுவரப்பட்டு இஸலாமிய தோற்றத்தில் இருந்து கொண்டு அதே செயல்களைச் செய்ய வழிவகை செய்துகொடுக்கப்பட்டுள்ளது எனலாம். தங்க முலாம் பூசிய குப்பைத் தொட்டி போல அனைத்துவகை அறியாமையையும், துர்குணங்களையும் சுமந்துகொண்டு, வெளித்தோற்றத்தில் மாத்திரம் மார்க்கப்பற்றை வெளிக்காட்டி, சமூகத்திலே அட்டகாசங்களை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை வேறு என்ன அமைப்பில்தான் விளக்குவது?   

 

"கலிமா", தொழுகை, இல்மும் திக்ரும், இக்ராம், இஃலாஸ், தப்லீக்ஃ" எனும் ஆறு அம்சங்களில் இஸ்லாத்தை சாராம்சம்ப்படுத்தி போதிக்கப் பட்டாலும் கூட அல்குர்'ஆனிலோ ஹதீஸிலோ இல்லாத விடயங்களே இவற்றுக்கான விளக்கமாக வழங்கப் படுகின்றன. இந்த அறியாமையை போக்க "ஈஸா" நபி அவர்களே வரவேண்டிய நிலைதான் உள்ளது. “படைக்கப்பட்டவைகளுக்கு படைப்பாலானைவிடவும் எந்த சக்தியுமில்லை” என்பதைக் குறிக்கும் "லா தாக்கத லி மக்லூகின், கைரல் காலிக்" எனும் வாசகத்தை "வஸ்துக்களுக்கு சக்தியில்லை, எல்லா சக்திகளும் அல்லாஹ்வுக்கே உண்டு" என்பதாக மொழிபெயர்த்து அதன் பின்னர் “வாஸ்து” என்றால் என்னவென்று விளக்க வேண்டிய தொரு தெளிவில்லாத நிலையை யாராலும் மறுக்க முடியுமா? அதேவேளை, இதே கருத்தையே "லா ஹவ்ல, வலா குவ்வத இல்லா பில்லாஹி" எனும் அரபு வாசகம் குறிக்கிறது. அப்படியிருக்க ஏன் "லா இலாஹா இல்லல்லாஹு" எனும் கலிமாவுக்கு இப்படியொரு விளக்கம் சொல்ல வேண்டும்? (அதாவது முதலாம் கலிமாவை ஏன் மூன்றாம் கலிமாவுக்குள் புகுத்தி குழப்பிக் கொள்ளவேண்டும்). அவ்வாறே ஆறு அம்சங்களின் மற்றய ஒவ்வொன்றும் எவ்வாறு குழப்பிக்கொள்ளப்பட்டுள்ளன என்பதை பல புத்தகங்களாக எழுதிக் கொண்டே போகலாம்.

 

குறிப்பாக "இல்மு வ திகார்" என்பது மிகப்பெரிய ஒரு தத்துவமாகும். அதாவது புத்தகங்களில் இருந்தோ அல்லது பிற மனிதர்களிடத்திலுந்தோ பெற்றுக்கொள்ளும் அறிவு அரைவாசியே. அது திக்ரினூடாக அல்லாஹ்வுடன் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பினாலேயே முழுமை அடையும் என்பதைக் குறிப்பதாகவே "இல்மும் திக்ரும்" என சேர்த்து சொல்லப் பட்டுள்ளது. இவ்வளவு மகத்தான ஒரு அம்சத்தை, ஒருசில ஹதீஸ் தொகுப்புகளை கூட்டகச் சேர்ந்து, ஒருவர் வாசிக்க மற்றவர்கள் தூங்குவது என்றாக்கிக் கொண்டுள்ளமையை என்னவென்ருதான் சொல்வது?

 

அதுபோல் உதாசீனப் படுத்தப்பட்ட இன்னொரு மிகப்பெரிய தத்துவமே "இக்ராம்' என்பதாகும். அது பற்றி சுருக்கமாகச் சொல்வதென்றால் முழு “பெளத்த” மதத்தையும் “சைவ சித்தாந்தங்களையும்” விட ஒரு படி தாண்டிய ஒரு போதனையே அதுவாகும். பெளத்தமும் சைவமும் "அகிம்சா" வாதத்தைப் போதிக்கிறது. அதற்கு அப்பால் ஒரு படி சென்று "பிறரை கண்ணியப்படுத்துவது" என்பதையே "இக்ராம்" எனும் அம்சம் குறிக்கிறது. அதாவது அகிம்சாவை கடைபிடிப்பவனிடத்தில் “இக்ராம்” இருக்க வேண்டும் எனும் நிர்ப்பந்த மில்லை, ஆனால் அகிம்சாவை கடைபிடிக்காமல் "இக்ராமை" கடைபிடிக்க முடியாது. இந்த அம்சம் இன்று எத்தகைய நிலையை அடைந்துள்ளது என்பதை சொல்லவும் வேண்டுமா. பிறரை கண்ணியப்படுத்துவது எப்படிப் போனாலும் கருத்துச் சுதந்திரம் கூட இல்லாத நிலையை என்னவென்ருதான் சொல்வது. அன்று சாம்ராஜ்ய ஆட்ச்சியாளர் உமர் (றழி) அவர்களின் கருத்துக்கு எதிராக ஒரு பெண்மணி எழுந்து கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால் இன்று இக்ராமுல் முஸ்லிமீன் என்பதை போதிக்கும் "தப்லீக் ஜமாஅத் அங்கத்தவர்கள் தங்களது பிழைகள் சுட்டிக்காட்டப் பட்டாலும் கூட கொலை வெறியுடன் நடந்து கொள்வதை யாராலும் மறுக்க முடியுமா? அப்படியென்றால் எங்கே சீர்திருத்தம் ஏற்பட்டிருக்கிறது?

 

“இக்லாஸ்” என்றால் அல்லாஹ்வுக்காகவே எதையும் செய்வது எனப் பொருள்.  அதைப் போதித்துக்கொண்டே வெறுமனே தமது இயக்க அங்கத்தவர்களை மாத்திரம் திருப்திப் படுத்துவதற்காக தொழுவது முதற்கொண்டு சகல காரியங்களையும் அமைத்துக் கொண்டிருக்கும் நிலையை என்னவென்ருதான் சொல்வது?

 

“தப்லீக்” என்பது, சத்தியத்தை எத்திவைப்பதா, அசத்தியத்தை எத்திவைப்பதை எனும் பேதமின்றி எதையும் எத்திவைக்கும் நிலையாக மாறிவிட்டமையை இல்லியாஸ் (றஹ்) அறிந்தால் என்ன செய்வாரோ தெரியாது. அது மாத்திரமா "ஹனபி" மத்ஹபை" பின்பற்றக் கூடியவர்களால் உருவாக்கப்பட்டு, வழிநாடாத்தப் படுகின்றன தப்லீக் ஜமாத்தைச் சார்ந்தவர்ககளில் சிலர் "ஷாபிஈ" மத்கப் கருத்துக்களை மாத்திரமே பின்பற்றுவோம் என அடம்பிடிக்கும் நிலையை ஆணவம் என்பதா, அறியாமை என்பதா?

 

அதுபோலவே, அடிக்கடி அறிவித்தல் செய்யப்படும் "இம்மை, மறுமையின் வெற்றி, அல்லாஹ்வின் தீனைப் பின்பற்றுவதிலேயே உள்ளது" எனும் வாசகத்தில் எந்தப் பிழையையும் காணமுடியாது. ஆனால் அது "இம்மையில் வெற்றி, மறுமையில் வெற்றியின் அடையாளம்" என்பதாக விளங்கிக் கொல்லப் படுவதாகவே அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. உலகில் வெற்றிகளையும், பிரபல்யத்தையும், அதிக எண்ணிக்கையிலான அங்கத்தவர்களையும், சமூகத்தில் ஆதிக்கத்தையும் கருத்தில் கொண்டு செயற்படுகின்றனரே அல்லாமல் சஹாபாக்களிடத்தில் காணப் பட்ட "அச்சத்துக்கும், நன்னம்பிக்கைக்கும், இடையிலான நிலைப்பாடு" (பைனல் க்கெளபி வர் ராஜா இ) எனும் நிலைப்பட்டை அதிகமானவர்களிடத்தில் காணக்கிடைப்பதில்லை. அதற்கு மாற்றமாக, பலரும் தமக்கு சுவர்க்கம் செல்வதற்கான சான்றிதழ் வழக்கப்பட்டுள்ளதை போன்று நடந்து கொள்வதை சான்றுபகர்வதற்கு சமூக அங்கத்தவர்களே போதுமானவர்களாவர்.

 

அத்துடன் நாம் தெரிந்திருக்க வேண்டிய மற்றொரு விடயமுள்ளது. அஃதாவது “மெளவி” என்பதும் “மௌலானா” என்பதும் "பை'அத்" செய்த தரீக்கா அங்கத்தவர்களை குறிக்கக் கூடிய சொற்களாகும். மெளலானா இல்லியாஸ் (றஹ்) அவர்களும் மெளலானா அபுல் அலா மெளதூதி (றஹ்) அவர்களும் ஷீஸ்டி (கவாஜா முயீனுத்தீன் ஷீஸ்டி) எனும் ஒரே தரீக்காவைச் சேர்ந்தவர்களாகும். அதனடிப்படையில் மேவாத் பிரதேசத்திலே மெளலானா இல்லியாஸ் (றஹ்) அவர்களின் பணிகள் சிறப்பாக நடைபெறுவதை புகழ்ந்து தனது "தர்ஜூமானுள் குர்'ஆன் எனும் பத்திரிகையில் மெளலானா மெளதூதி அவர்கள் எழுதியுள்ளார்கள். இவ்வாறு ஒற்றுமையாகவும் ஒருவருக் கொருவர் உறுதுணையாகவும் இருந்தவர்களை பின்பற்றுகின்றவர்களின் இன்றய நிலையை சொல்லவும் வேண்டுமா. மெளலானா மெளதூதி அவர்கள் எழுதிய புத்தங்கங்களை அடுப்பை எரிக்கப் பயன்படுத்தி, சமைத்து சாப்பிட்டு பெருமை பேசியமையை யாரிடம் முறையிடுவது?     

 

இவற்றுக்கப்பால் நாம் சிந்திக்க வேண்டிய இன்னொரு முக்கிய விடயமுள்ளது. உதாரணமாக முஸ்லீம்களல்லாத சிங்கள சமூகத்திலே மிகவும் படித்த, சிறந்த நற்குணங்களைக் கொண்ட எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் எந்தவித ஜாமத்தும் கிடையாது. வழிகாட்ட அல்குர்'ஆனும் கிடையாது. நபிப் போதனைகளும் கிடையாது. அப்படியிருக்க, அவர்களிடத்தில் எங்கிருந்து இந்த அறிவும், நற்குணங்களும் வந்தன. (அவர்கள் சுவர்க்கவாதிகளா, இல்லையா என்பது தீர்ப்பு நாளில் முடிவு செய்யப்படும் விடயமாகும்.) இவ்வாறு சமூகத்தில் ஒரு சிலர் படித்தவர்களாகவும் பண்பாடுடையவர்களாகவும் இருப்பதை நாம் மாற்றம் என்றோ,  சீர்திருத்தம் என்றோ கூற முடியாது. அதனடிப்படையில் இல்லியாஸ் (றஹ்) அவர்கள் உருவாக்கிய முயற்சி எந்த மாற்றத்தை இஸ்லாமிய சமூகத்துக்கு கொண்டுவந்திருக்கிறது என்பது யாவரும் சிந்திக்கத்தக்கதே. அதைவிடவும் ஆச்சரியம் என்னவெனில்; இத்துணை மார்க்க முரணான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டு, தான் நேரான வழியிலேயே இருக்கிறோம் எனும் நினைப்பில் அல்லாஹ்வின் உதவியை எதிர்ப்பார்ப்பதாகும். இதைவிடவும் மடமை வேறெதுவாக இருக்க முடியும்? அண்மைக் காலங்களில் முஸ்லீம்கள் மிகமோசமாக பாதிப்புக்குள்ளாகிய "பர்மாவில்" அன்று தப்லீக் ஜமாஅத் மிகப் பிரபல்யமாக செயற்பட்டமையையும், அதன்பயனாக பல மாணவர்கள் இலங்கை மத்ரஸாக்களில் கல்விகற்க அனுப்பிவைக் கப்பட்டமையையும் யாரும் மறந்திருக்க முடியாது. அதுபோலவே இந்தியாவிலும் முஸ்லீம்கள் மிகக் கடுமையாக பாதிப்புகளுக்கு உள்ளாகிவருகின்றமையை நாம் கேள்விப்படுகிறோம். இவைகளை எப்படி அல்லாஹ்வின் உதவி என்பது. அவ்வாறே பாகிஸ்தானிலே முஸ்லீம்களாலேயே முஸ்லீம்களின் இரத்தம் ஓட்டப் படுகின்றமையை அறிகிறோம். இதை எப்படி சமூக சீர்திருத்தமென்பது. எனவே சமூக சீர்திருத்தம் என்றால் என்ன என்பதை யாரும் சரியாக விளங்கிக் கொள்ளவேண்டிய தொரு முக்கிய தருணமாக இந்த கொரோனா காலத்தைக் கொள்ளலாம்.  .

 

கொரோன நோய்த்தொற்று உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும் இப்படியொரு சிறிய கிருமையைக் காரணம் காட்டி முழு உலகின் செயல்பாடுகளும் முடக்கப்பட்டது மாத்திரமன்றி, ஹஜ், உம்ரா கிரிகை கூட செய்ய முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியிருப்பதைக் கண்டு யாரும் பாடம் படிக்காவிட்டால்...........

 

நபி (ஸல்) அவர்களது காலத்திலேயே காற்று சற்று வேகமாக வீசி, மேகம் கூட ஆரம்பித்தாலே, நபி (ஸல்) அவர்கள் இறைவனது வேதனை வரப்போகிறதோ எனும் அச்சத்தில் பள்ளிவாயலினுள் நுழைந்து தொழ ஆரம்பிப்பார்கள் என அறியக்கிடைக்கிறது. ஆனால் முழு உலகையும் ஆட்கொண்ட இந்த கொரோனா எனும் சோதனை வந்ததைக் கண்டு அச்சம் கொள்ளாவிட்டால்..........................?

 

©: மு. பிர்தெளஸ் ரஷீத்

சில உசாத்துணைகள்:    

https://en.wikipedia.org/wiki/Muhammad_Ilyas_Kandhlawi

http://www.darululoom-deoband.com/english/

https://en.wikipedia.org/wiki/Darul_Uloom_Deoband

https://en.wikipedia.org/wiki/Rashid_Ahmad_Gangohi

 

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...