Friday, January 21, 2022

 நாடு நிலமை

நாடு-நிலமை என்பது இஸ்லாத்தில் உள்ள மிக முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாகும். இது அரபியில் "வசதிய்யா" என அழைக்கப் படும். தக்வா, தஸ்கியா, இப்பாத், ஸுஹ்த், ததவ்வு, ஜிஹாத் என்பன இது போன்ற இன்னும் பல முக்கிய கோட்பாடுகளாகும். இஸ்லாம் மார்க்கத்தின் முழு மொத்த வடிவமும் நடுநிலையாக அமைந்திருக்கிறது என்பது யாவரும் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய அம்சமாகும் (பார்க்க அல்குர்'ஆன் 2:143).

 

இஸ்லாம் தோற்றம் பெறுவதற்கு முன்னய காலத்தை எடுத்து நோக்கினால் அங்கு இரண்டு விதமான தீவிர போக்குகளை தெளிவாகக் காணலாம். ஒன்று உலக பற்றை முற்றாக கைவிட்டு துறவிகளாக வாழ்ந்தமை. மற்றயது உலக அடைவுகளை மையமாகக் கொண்ட வியாபார, தொழில் முயற்சிகளும் யுத்தங்களுமாகும். வியாபார மற்றும் தொழில் முயற்சிகளில் அடிமைக் கலாச்சாரம் காணப் பட்டமையும், யுத்தங்களின்போது முழு நாடுமே அடிமையாக மாறியாமையும் இது விடயமாக குறிப்பிடத்தக்க ஒரு தோற்றப்பாடாகக் கூறலாம். மறுபக்கமாக இவை அனைத்தையும் துறந்த துறவிகள், இறைவணக்கம், தியானம், அறிவைக் கற்றுக்கொடுத்தல், நல்லுபதேசம் செய்தல் போன்ற நற்பணிகளில் ஈடுபட்டமையையும் காணலாம். றபாய்கள் - யூத மதம், திருத்தந்தை (பாதர்) - கிறிஸ்த மதம், மற்றும் பெளத்த, இந்து மதத் துறவிகள் ஆகியோர் இதற்கு சிறந்த உதாரணங்களாவர். இஸலாத்திலே, இத்தகைய துறவரமும் இல்லை இறைவனையும், மறுமையையும் மறந்த உலோகாயதமும் இல்லை என்பது யாவரும் அறிந்த விடமேயாகும். அதற்கிணங்க இஸ்லாம் ஒரு நடு-நிலமையான வாழ்க்கை அமைப்பை போதிக்கிறது என்பதை சுருக்கமாக விளங்கிக் கொள்ளலாம்.

 

இந்த நடுநிலையான வாழ்க்கை முறையை பின்பற்றுகின்ற முஸ்லீம்கள் மத்தியிலும் இரண்டுவகை தீவிர சிந்தனை போக்குகள் உருவாவது தவிர்க்க முடியாததேயாகும். ஒன்று உலகாயத போக்கை அண்மித்த ஒரு நிலைமை, மற்றயது துறவறத்தை அண்மித்த ஒரு நிலைமையுமாகும். இந்த இரண்டு நிலைமைக்கு மத்தியிலும் நடுநிலமை காப்பதே சவாலுக்குரிய விடயமாகும்.

 

மார்க்க விடயங்களில் பொடுபோக்காக இருக்கின்றவர்கள் உலகாயதத்தை அண்மித்தவர்கள் என்பது தெளிவானதே. ஆனால் துறவறத்தை அண்மித்தவர்கள் யார், அவர்களின் நிலைமை எத்தகையது என்பதுவே தெளிவில்லாத விடயமாக உள்ளது. அதிலும் குறிப்பாக துறவறத்தை அண்மித்தவர்கள் எனும் தோற்றத்தில் உலகாயதவாதிகள் இருப்பதுவே நிலைமையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது என்றால் மிகையாகாது. இஸ்லாம் துறவறத்தை போதிக்கவில்லை என்றாலும் கூட துறவறத்தை அண்மித்த ஒரு நிலை இஸ்லாத்தில் போற்றத்தக்கதாக உள்ளதை காணலாம். அதுவே "ஸுஹ்த்' (பற்றற்ற வாழ்க்கை) என இஸ்லாமிய அறிஞர்களால் வரையறுக்கப் பட்டுள்ளது. இதற்கு மிகச் சிறந்த உதாரண புருஷர் உமர் (றழி) அவர்களாவார். ஈடிணையற்ற இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின்  அரசர் எனும் நிலையில் இருந்தாலும் கூட அரசிலிருந்து மிகச் சிறிய வருமானத்தைப் பெற்று மிக மிக எளிமையாகவே வாழ்ந்தார்கள்.  இத்தகைய பற்றற்ற வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் இருந்துள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

பற்றற்ற நிலை (ஸுஹ்த்) என்பது இரண்டு வகைப்படும். ஒன்று வெளிப்புற நிலை, மற்றயது அக நிலையுமாகும். இஸ்லாத்தின் போதனைகளுக் கிணங்க அக நிலைக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். "அல்லாஹ் உங்களது தோற்றத்தையோ, உடல் பருமனையோ பார்ப்பதில்லை மாறாக உள்ளத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறான்" (முஸ்லிம்) எனும் நபி மொழி உட்பட இன்னும் பல அல்குர்'ஆன் வசனங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன (பார்க்க 22:37). அதேவேளை  மேற்சொன்ன நபி மொழியை சுட்டிக்காட்டி சிலர் தமது புற நிலையை அலங்கோலமாக வைத்துக்கொண்டிருக்கும் நிலையும் பிழையானது என்பது சந்தர்ப்பம் கருதி சுருக்கமாக சுட்டிக் காட்டப் படுகிறது. மேலும் பொருத்தமான கால சூழ்நிலைக்கேற்ற ஆடைகளை அணியாமை, குறிப்பிட்ட ஒருவகை ஆடை மாத்திரமே உளப்பாக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள உதவும் எனும் நம்பிக்கை, மற்றும் "மீசையை கத்தரித்த்துக் கொள்ளுங்கள் எனும்" நபி மொழியை சுட்டிக் காட்டி மீசையை முற்றாக மலித்துக் கொண்டு அகோரமாக காட்ச்சி தரல் என்பனவும் இதுபோன்ற பிழையான செயல்பாடுகளாகும். அல்குர்'ஆன் மற்றும் நபி வழி என்பவற்றுக்கு இவை எவ்வாறு முரண்படுகிறது எனும் விளக்கம் விரிவு கருதி இங்கு தவிர்த்துக் கொல்லப் படுகிறது.

 

இவ்வாறு இஸ்லாத்தின் போதனைகளை முறையற்ற விதத்தில் தீவிரமாக பின்பற்றுவதை "குளுவு"- (கு வல்லினம்) என மார்க்க அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். இஸ்லாம் என்பது வெறுமனே ஒரு குர்'ஆன் வசனம் மாத்திரமோ அல்லது ஒரு நபி மொழி மாத்திரமோ அல்ல. மாறாக அல்குர்'ஆணிலே 6666 வசனங்கள் உள்ளதாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. மேலும் நபி வாக்குகளும் 6 முக்கிய கிரந்தங்கள் உள்பட இன்னும் பல கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.  இவை அனைத்தையும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் விளக்கி பல அறிஞர்களால் எழுதப்பட்ட விளக்க நூல்களும் (ஷரஹ்) உள்ளன. இவைகளை முறைப்படி கற்றால் மாத்திரமே ஒவ்வொரு விடயத்திலும் சரியான தெளிவை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறில்லாமல், ஒரு சில குர்'ஆன் வசனங்களை மையமாகக் கொண்டு அல்லது ஒரு சில நபி மொழிகளை மையமாகக் கொண்டு தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளும் பொழுது இந்த முறையற்ற தீவிரத்தன்மை (குளுவு) உருவாகிறது. அத்தகைய தீவிரத்தனமையின் ஒரு வடிவமாகவே தாலிபான், ஐஎஸ் அமைப்பு மற்றும் போகோஹறாம் அமைப்பு ஆகியவற்றின் செயற்பாடுகளைக் கூறலாம். ஒரு மனிதன் இத்தகைய தீவிர போக்கிற்குள் அகப்படுவது தவிர்க்க முடியாததேயாகும். அதற்கு காரணம் குறையறிவாகும். உதாரணமாக "ஹம்சா யூசுப்" எனும் ஆங்கில பேச்சாளரை எடுத்துக் கொண்டால், அவரிடத்தில் சில தீவிர போக்குகள் இருந்ததாக அவரே ஒத்துக்க கொள்கிறார். ஆனால் பின்னர் அவர் பெற்ற தெளிவின் காரணமாக தற்பொழுது நடுநிலைமையை கடைப்பிடிப்பவராக மாத்திரமன்றி அமெரிக்க ஜனாதிபதியின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் தன்னைப் பற்றி சொல்லும் பொழுது “I was like a loos cannon” (ஒரு காலத்தின் தான் இலக்கு பாராமல் தாக்குகின்ற ஒரு பீரங்கி போல்) இருந்ததாக கூறுகிறார். ஆனால் மார்க்கத்தின் அடிப்படைகள் மற்றும் முக்கிய விதிகள் பேணப்படும் பொழுது அந்த தீவிரத்தன்மையின் விபரீதங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமாக  இருக்கும்.

 

மார்க்கத்தின் அடிப்படைகளில் முக்கியமானதொன்றை பின்வருமாறு விளங்கிக் கொள்ளலாம். இஸ்லாத்தில் பாவங்கள் முக்கியமாக இரண்டு வகைப் படும். ஒன்று மனிதனுக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட விடயம். மற்றயது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடைப்பட்ட விடயமுமாகும். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட விடயத்தை அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்பதன் மூலமும் மன்னிப்பை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான பாவச் செயல்களில் பாதிக்கப் பட்ட மனிதன் மன்னிக்காத வரை அதை இறைவன் மன்னிக்க மாட்டான் என்பதாகும். இந்த விடயத்தை தெளிவுபடுத்துகின்ற பல நபிப் போதனைகள் உள்ளன. அவைகளில் குறிப்பாக "முப்லிஸ்" (நஷ்டமடைந்தவன்) என்பதை விளக்கும் ஒரு நபி மொழி இந்த விடயத்தை தெளிவுபடுத்துகிறது (முஸ்லிம் 2581).

 

இஸ்லாம் போதிக்கின்ற சட்டதிட்டங்கள், ஒழுக்க விழுமியங்கள், மற்றும் நற்பண்புகள் அனைத்தும் இந்த வகையைச் சார்ந்ததாகும். இவற்றுக்கு அப்பால் உள்ள நம்பிக்கை சார்ந்த அம்சங்களும் வணக்க அனுஷ்டானங்ளும் ஒப்பீட்டளவில் மிகச் சிலவேயாகும். அதே வேளை அவை முக்கியத்துவம் வாய்ந்தன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். உதாரணமாக அவ்லியா என நம்பப் படக்கூடிய ஒருவரின் அடக்கஸ்தலத்த்தில் பிரார்த்தனை புரியாக் கூடிய ஒருவரின் உடலுக்கோ அல்லது சொத்துக்களுக்கு எதோ ஒரு காரணத்தினால் சேதம்  ஏற்படுமாக இருந்தால் அவ்வாறு சேதம் ஏற்படுத்தியவர்கள் அந்த குற்றத்துக்காக தண்டிக்கப் படுவர். அதேவேளை தவறான கொள்கையுடைய அவர் தனது மரணத்துக்கு முன்னர் திருந்தி இருந்தால் அவர் தனது தவறான செயலுக்காக தண்டிக்கப் படமாட்டார். இந்நிலையில் சரியான கொள்கை உடையவர் மாத்திரம் தனது தவறுக்காக தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலை உருவாகும். ஒரு முஸ்லிமின் முக்கிய இலக்குகளில் ஒன்று இறைவனின் தண்டனையை விட்டும் தப்பித்துக் கொள்வது என்ற வகையில் இஸ்லாத்தில் எது முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இந்த சிறிய உதாரணத்தின் மூலம் சுருக்கமாக விளங்கிக் கொள்ளலாம். அதேவேளை இந்த அம்சம் நீண்ட விளக்கங்கள் கொண்ட மிக விரிவான அம்சம் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கதாகும். 

 

இவ்வாறாக மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் காணப்படுகின்ற செயற்பாடுகளில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வது "தக்வா" எனும் அம்சத்தின் முக்கிய பகுதி என்பது சரிவர விளங்கிக் கொள்ளப் படாமையே இன்றய கால பித்தனாக்களின் தலையாய பித்தனா என்றால் மிகையாகாது. இந்த "தக்வாவை" தான் ஒவ்வொரு ஜும்மா தினத்திலும் குத்பா உரை நிகழ்த்தும் இமாம் போதிக்கிறார் என்பதை எத்துணைபேர்தான் விளங்கிவைத்திருப்பர்? அந்த தக்வா பற்றிய போதனையை கேற்க வயோதிபர்கள் மாத்திரமல்லவா இருப்பர், மற்றவர்கள் பின்னர் அல்லவா வந்து சேர்ந்து கொள்வர்.

 

இஸ்லாத்திலே "ஈமான்" மற்றும் "தக்வா" என்பன மிக முக்கிய இரண்டு பகுதிகளாகும். அந்த தக்வாவின் முக்கிய அங்கமே பிற மனிதர்களுடனான செயற்பாடுகளாகும். இப்படியாக இஸ்லாத்தின் முக்கியத்துவம் கொடுக்கப் படவேண்டிய அம்சங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் "குளுவு" எனும் வழிகெட்ட தீவிரப் போக்கைவிட்டும் தற்காத்துக் கொள்ளலாம் எனச் சுருக்கமாகச் சொல்லலாம்.  

 

அதேவேளை "ஸுஹ்த்" எனும் பற்றற்ற தன்மை எனும் விடயத்திலும் நடுநிலை பேணுவது போற்றத்தக்கதாகும். இதுவிடயமாக ஒரு சிறப்பான சம்பவம் வரலாற்றில் பதியப் பட்டுள்ளது. தனது ஆன்மாவை தூய்மைப் படுத்திக்க கொள்ள விருப்பிய ஒருவர் வழிகேற்கிறார். அவர் அந்த மனிதனை அடைந்த பொழுது அவர் பெரும் வியாபாரியாக இருப்பதைக் காண்கிறார். எனவே "ஸுஹ்த்" என்பதன் அர்த்தம் எல்லாவற்றையும் துறந்திருத்தல் மாத்திரமல்ல. அவரவரைப் பொறுத்து அது வித்தியாசப் படும்.

இஸ்லாம் மார்க்கத்தில் நடுநிலைமை பேனல் மிக விசாலமான நீண்ட விளக்கங்கள் சொல்லப் படவேண்டிய அம்சமாக இருந்தாலும் கூட அதை மேற்சொன்னவாறு மிகச் சுருக்கமாக விளங்கிக் கொள்ளலாம்.   

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...