Friday, January 21, 2022

 சிறந்த சமூகம்

மனிதன் இப்பூமியிலே தோன்றிய காலம் தொட்டு உருவாகிய மனித சமூகங்களில் ஒரு சமூகம் மாத்திரம் மிகச் சிறந்த சமூகம் என்று படைத்த இறைவனே புகழாரம் சூட்டுவது ஒரு சாதாரண விடயமல்லவே. இற்றை வரைக்கும் கிடைக்கப் பெற்ற வரலாற்றுச் சான்றுகளுக்கிணங்க, ஒரு லட்சத்து முப்பதாயிரம் வருடங்களுக்கு முன் இப்பூமியில் மனிதன் வாழ்ந்துள்ளான் என்று நிரூபணமாகிறது. அதற்கு முன்னர், பல மில்லியன் வருடங்களாக இப்பூமி படிப்படியாக உருவாகி மனிதன் வாழக்கூடிய இடமாக மாறியுள்ளது என்று புவியியல் விஞ்ஞானம் கூறுகிறது. இப்படியாக  பல மில்லியன் வருட வரலாற்றைக் கொண்ட இப்பூமியில், பல கோடி உயிரினங்கள் வாழ்கின்றன. அவை அனைத்தை விடவும் மனித இனத்தை சிறந்த இனமாக படைத்தவன் ஆக்கியுள்ளான் (17:70) என்பது யாவரும் சிந்திக்கத் தக்கதே. அந்த மனிதன் நூறாயிரம் வருடங்களுக்கு மேலாக பல மனித சமூகங்களாக வாழ்ந்து வருகிறான். அவைகளிலே ஒரு சமூகம் மாத்திரம் சிறப்பான சமூகம் என்பது எவ்வளவு மகத்தான விடயமாக இருக்கும்...?     

 

அந்த மகிமைக்கான காரணம் என்னவெனில், அந்த சமூகம் தங்களுக்கு மத்தியில் நல்லனவற்றை கடை பிடிக்கும் படி ஏவுவதும், தீயனவற்றை தவிர்ந்து வாழும் படியும் போதிப்பதுமாகும் என அல்குர்'ஆன் கூறுகிறது (3:110).

 

ஒரு குழந்தையைப் பெற்ற தாய் தானறிந்த நல்லனவற்றையெல்லாம் தனது குழந்தைக்கு செய்யக் கற்றுக் கொடுப்பாள். தானறிந்த தீயனவற்றை விட்டும் தவிர்ந்துகொள்ளும் படி ஏவுவாள். மனிதனைப் படைத்த இறைவன் தாயிலும் பலமடங்கு கருணை மிக்கவன். ஆனாலும் அவன் நன்மை எது தீமை எது எனும் அறிவை மாத்திரம் சொல்லித் தந்துள்ளானே யல்லாமல் அதை ஏவும் பணியை தானாகச் செய்வதில்லை. அந்த பணியை செய்யக் கூடிய சமூகம் அந்த சிறப்பான பணியை நிறைவேற்றுகிறது அல்லவா. ஆதாலால் ஏனைய எல்லா சமூகங்களை விடவும் அது சிறந்து விளங்குவது ஆச்சரியத்துக்குரிய விடயமல்லவே.

 

வரலாற்றில் தோன்றிய சமூகங்களுள் யூத சமூகம் முக்கியமான தொன்றாகும். அந்த சமூகத்துக்கு இப்பூமியில் யாருக்கும் கொடுக்காத ஆட்சி வல்லமையை அல்லாஹ் கொடுத்திருந்தான். பறவைகள், ஜின் இனம், மற்றும் காற்றையும் வசப் படுத்தி ஆட்சி செய்யக் கூடிய வல்லமையை கொடுத்தான் (38:36-39). அத்தகைய சிறப்பு மிகு சமூகத்தின் குறைபாடு பற்றி படைத்தவன் சொல்லும் பொழுது "அவர்களில் சிலர் தவறை மற்றவர்கள் செய்ய வேண்டாம் எனப் போதிக்காமல் இருந்தனர் (5:70) எனச் சொல்கிறான். இத்தகைய குறைபாடுகள் காரணமாக அந்த சமூகம் இறைவனால் சபிக்கப்பட்டது என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்(5:60).

 

அதன் மறுபக்கமாக நல்லனவற்றை செய்யும் படி ஏவுவதும் தீமைகளை தவிர்ந்து கொள்ளும் படி போதிப்பதுவும் ஒரு சமூகம் சிறப்பானதாக மாறுவதற்கான முக்கிய காரணமாகிறது. அந்த சிறப்புக்குரிய அம்சத்தில் தெளிவு பெற்றுக்கொள்ளக் கூடிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. அவைகளாவன; எது நல்லன எது தீயன எனும் விடயமும், எப்படி ஏவுவது, எப்படி தவிர்ந்து கொள்ளுமாறு போதிப்பது எனும் விடயமுமாகும்.  

 

எது தீமை எனும் விடயம் மேலே சுட்டிக்காட்டப் பட்டதற்கிணங்க படைத்த இறைவனால் சொல்லித் தரப்பட்டுள்ளது. அதில் அதிகமானவை அவன் அருளிய அல்குர்'ஆனில் போதிக்கப் பட்டுள்ளது. அதேவேளை நல்லன எனும் விடயம் மார்க்க விடயங்களுக்குள் மாத்திரம் சுருங்கிக் கொண்டனவல்ல என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கதாகும். இங்கு நல்லனவைகள் என்பதைக் குறிக்க அல்குர்'ஆன் பயன்படுத்தியுள்ள "மஃரூப்" எனும் சொல் மனித சமூகம் அறிந்த அனைத்து நல்லனவற்றையும் குறிக்கும். அது மார்க்கம் சம்பந்தப்பட்டதாக இருக்கும் பட்சத்தில், மார்க்கம் போதிக்கும் வரையறைகள் கருத்தில் கொள்ளப் படவேண்டும்.

 

அதேவேளை நன்மையை ஏவும் பணியைச் செய்ய விரும்புகின்றவர்கள் மார்க்கம் சம்பந்தமான விடயங்கள் பற்றி ஏவுவது அல்லது விலக்குவது எனும் பணியை செய்வதாக இருந்தால், அல்குர்'ஆனை கற்றுத் தெளிந்திருக்கவேண்டிய கடமைப்பாடு உடையவர்களாகின்றனர். அவ்வாறில்லாமல் நன்மையை ஏவ முற்படுவது, தீமை செய்வதாகவே அமையும் என்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும். இன்று சமூகத்தில் தடுக்கப் படவேண்டிய முக்கிய தீமைகளில் இது முதலிடத்தை வகிக்கிறது என்றால் மிகையாகாது. "லெப்பைக்கு எதற்கு முட்டை யாவாரம்" என ஒரு கூற்று இருக்கிறது. அதன் அர்த்தம் லெப்பை வியாபாரம் செய்யக் கூடாது என்பதல்ல. மாறாக சமூகத்தை ஒற்றுமையாக வைத்திருக்கவேண்டிய ஒரு முக்கிய பணி அவருக்கு இருக்க, தரம் பற்றி தெளிவில்லாத ஒரு பொருளை (அழுகிய முட்டை) விற்பதனால் சர்ச்சைகள் ஏற்பட்டால், எவ்வாறு அவரால் சமூகத்தின் ஒற்றுமையை நிர்வகிக்க முடியும்? இப்படியாக பொருத்தமற்ற விடயங்களை பொருத்தமற்றவர்கள் செய்ய முற்படுவது இன்றய சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றமையை “பித்தனா உடைய ஸமானின் ஒரு முக்கிய பித்தனாவாகும்” என்பது சாலப் பொருத்தமாகும். மருந்து கொடுக்க வேண்டிய மருத்துவர்கள் மார்க்கத் தீர்ப்பு (பத்வா) வழங்க முற்படுவதும், மார்க்கம் சொல்லிக் கொடுக்கவேண்டியவர் மருத்துவம் செய்ய முற்படுவதும் போன்றன இது போன்ற சில தவறுகளின் உதாரணங்கள் மாத்திரமே. எனவே, தாம் செய்யும் செயல் பற்றி நன்கு தெளிவு பெறாமல் செய்யப் போவது முதலில் தவிர்க்கப் படவேண்டிய முக்கிய விடயமாகும்.  

 

நன்மையை ஏவ விரும்புகின்றவர்கள் அல்குர்'ஆனைத் தெளிவுறக் கற்றிருத்தல் கட்டாயக் கடமையாகிறது. இவ்வாறாக ஒரு மருத்துவர் அல்குர்'ஆனை தெளிவுறக் கற்ற பின்னர் அது சொல்லும் நன்மையை ஏவும் பணியைச் செய்வது பிழையாகாது என்பது சந்தர்ப்பம் கருதி சுட்டிக் காட்டப் படுகிறது. மாறாக சிலவற்றைக் கற்றுக் கொண்டவுடன், முந்திரிக் கொட்டை போல், முன்திக் கொள்வதுவே தவிர்க்கப் படவேண்டியதாகும். அதேவேளை, மருத்துவர்கள் தானறிந்த சுகாதார பழக்கவழக்கங்கள் மற்றும் தெளிவான மருத்துவக் குறிப்புகள் என்பனவற்றை சொல்லிக் கொடுப்பதும் இந்த நன்மையை ஏவும் அம்சத்தில் அடங்கும் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கதாகும். மேலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கழிவு முகாமைத்துவம், வளிமண்டல பாதுகாப்பு போன்ற இன்னோரன்ன அம்சங்கள் பற்றிப் போதிப்பதும் இந்த நன்மையை ஏவும் பணியில் உள்ளடங்கும் என்பதும் யாவரும் கருத்தில் கொள்ளத்தக்கதே. அவ்வாறே போதைவஸ்துப் பாவனை, சுற்றுச் சூழல் மாசடைதல், தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், கலப்படம், வீண்விரயம், போன்றவற்றுக்கு எதிரான பிரச்சாரங்கள் தீயனவற்றைத் தவிர்க்கப் போதித்தல் என்பதில் அடங்கும். இவை இது சம்பந்தமான ஒரு சில உதாரணங்கள் மாத்திரமே யாகும்.

 

இந்த நன்மையை ஏவல் மற்றும் தீயன வற்றைத் தவிர்க்கப் போதித்தல் என்பது சம்பந்தமாக தெளிவு பெற்றிருக்க வேண்டிய இன்னொரு முக்கிய அம்சம், இந்த விடயம் பற்றிய ஒரு பிழையான அபிப்பிராயமாகும். அஃதாவது இந்த விடயத்தை சிலர் நன்மையை ஏவலும் தீமையைத் தடுத்தாலும் என விளங்கிக் கொள்வதாகும். அதற்கு ஏற்றாற்போல் இன்னுமொரு நபி மொழியையும் சேர்த்துக் கொள்வர். ஆனால் இந்த இரண்டு அம்சங்களும் வித்தியாசமான இரண்டு அம்சங்களாகும். நன்மையை ஏவல் என்பது தெளிவானதே. அதுபோல் தீமையை தவிர்க ஏவல் என்பதுதான் பொருள். மாறாக சிலர் அதை தீமையைத் தடுத்தல் என்று பொருள் கொள்கின்றனர். அதற்கு சாதகமாக "யார் ஒரு தீமையைக் காண்கின்றனரே அதை அவர் தமது கரத்தினால் தடுக்கட்டும்" (முஸ்லிம் - ஈமான்)  என்று சொல்லப் பட்டுள்ள நபி மொழியை சேர்த்துக் கொள்கின்றனர். இந்த நபி மொழியின் அரபுப் பிரயோகத்தை எடுத்து நோக்கினால் அதில் தடுத்தல் என்பதைக் குறிக்க "யுகையிர்" என்றும், தீமையை தவிர்க்கப் போதித்தல் என்பது "நஹ்யு" என்றும் சொல்லப் பட்டிருப்பதைக் காணலாம். அதனடிப்படையில் இவை இரண்டும் வெவ்வேறானவை எனச் சுருக்கமாக விளங்கிக் கொள்ளலாம். 

 

நன்மையை ஏவல் மற்றும் தீமையைத் தவிர்க்கப் போதித்தல் எனும் விடயத்துடன் நெருங்கிய தொடர்ப்புடைய ஒரு விடயம்தான் "இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை" எனும் அல்குர்'ஆனின் போதனையாகும் (2:256). அந்த நிர்ப்பந்தம் எனும் அம்சம் இரண்டு விடயங்களுக்கும் பொருந்தும். அதாவது நம்மை செய்ய நிர்ப்பந்திக்கவும் முடியாது, தீமையை தவிர்க்க நிர்பந்திக்கவும் முடியாது முடியாது  என்பதாகும். அதேவேளை, சில பாவச் செயல்களுக்காக இஸ்லாம் முன்வைத்துள்ள தண்டனைகள் தீமையை தடுப்பதாக இருந்தாலும் அதனை நன்மையை ஏவலும் தீமைக்கு எதிராக பிரச்சாரம் செய்வதும் எனும் அம்சத்தில் உள்ளடக்க முடியாது. மாறாக அது ஆட்ச்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் கடமை எனும் வரையறைக்குள் அடங்குவதாகும் என சுருக்கமாகக் கூறலாம். அத்துடன் தண்டனை வழங்குவதைவிட கருணை காட்டப் படுவதற்கு முன்னுரிமை வழங்கப் படும் என்பதே இஸ்லாத்தின் போதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதற்கு மாற்றமாக யாராவது தான் நினைத்தவாறு தீமையை தடுக்க முயல்வது இறைவனின் கோபத்தை சம்பாதித்துத் தரும் என்பது, இறைவனின் தண்டனைக்கு அஞ்சிக் கொள்கின்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும். தீவிரவாதமாக சிந்தனைகள் உருவாவதற்கு இந்த விடயத்தில் தெளிவில்லாமை ஒரு முக்கிய காரணம் என்பது சந்தர்ப்பம் கருதி சுட்டிக் காட்டப் படுகிறது.

  

நன்மைகள் யாவன மற்றும் தீமைகள் யாவன எனும் அம்சத்தை சொல்லித்தரும் மற்றொரு மூலம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனைகளாகும். அல்குர்'ஆனைப் பார்க்கிலும் இது மிகவும் விசாலமான ஒரு அம்சம் என்பதால் துறைசார்ந்தவர்கள் மாத்திரம் இதுவிடயமாக ஈடுபடுவது சிறப்புக்குரியதாகும். அவ்வாறில்லாமல் தமது குறுகிய அறிவின் அடிப்படையில் "புஹாரி" மற்றும் "முஸ்லிம்" ஆகிய கிரந்தங்களில் பொதிந்துள்ளவை முற்றிலும் சரியானவை எனக் கருதிக் கொண்டு அந்த இரண்டு கிரந்தங்களுக்கும் எழுதப் பட்டுள்ள விளக்க நூல்கள் எதையும் கற்காமல், நன்மையை ஏவல் மற்றும் தீமையைத் தவிர்க்க போதித்தல் எனும் பணியில் ஈடுபடுவது ஆற்றில் குளிக்கப் போய் சேற்றில் குதித்தெழும்பியதாகவே அமையும் என்பது யாரும் சிந்தித்துணர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும்.    

 

அவ்வாறே நன்மையை ஏவல் மற்றும் தீமையை தவிர்த்துக்கொள்ள போதித்தல் எனும் பணியை செய்ய முற்படுகின்றவர்கள் "பத்வா" (மார்க்க தீர்ப்பு) சொல்ல முற்படுவது முற்றிலும் தவர்த்த்து கொள்ளப் படவேண்டிய முக்கிய அம்சமாகும். அத்தகைய சந்தர்ப்பங்கள் இந்த பணியை செய்யக் கூடிவர்களுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாததே. அவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன் எனும் அடிப்படையில் அவனே யாவற்றுக்கும் போதுமானவன் (ஹாஸ்பியல்லாஹு வன்னிஃமல் வக்கீல்) என்று ஒதுங்கிக் கொள்வதே பக்குவமான வழிமுறையாகும். அதேவேளை அந்த விடயம் சம்பந்தமாக ஏற்கனவே மார்க்க அறிஞர்கள் கூறியுள்ள "பத்வா" (மார்க்கத்தீர்ப்பு) இருந்தால் அந்த அறிஞரை தொடர்புபடுத்தி இன்ன அறிஞர் இவ்வாறு கூறியுள்ளார் எனச் சொல்வது பிழையாகாது என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.

 

இவ்வாறாக, இந்த நன்மையை ஏவல் மற்றும் தீமையை தவிர்ந்து கொள்ள போதித்தல் எனும் அறப்பணியை மேற்கொள்கின்றவர்கள் தமது பணி பற்றிய விடயங்களை சரிவர கற்றுத் தெளிந்து அதில் ஈடுபடுவதே போற்றத்தக்கதாக அமையும் அதே வேளை, இன்றய உலகின் முன்னேற்றமடைந்த ஊடக யுக்திகளை பயன்படுத்தி இப்பணியில் ஈடுபடுகின்ற அனைவரது செயல்களும் இன, மத, துறை வேறுபாடின்றி பாராட்டுக் குரியனவேயாகும்.

 

அத்துடன் "இலத்திர-வலையமைப்பு" (இன்டர் நெட்) ஒளியொலி ஊடகம் ( மல்டி மீடியா) மற்றும் தகவல்-மென்பொருள் (சொப்ட்வெயர்) போன்ற அமைப்புகளூடாக அரிய தகவல்களையும், அறிஞர்களின் நூல்களையும் இலவசமாக கற்றறிந்துகொள்ள வழிவகை செய்துள்ளமையும் அதிகம் போற்றத்தக்க, மகத்தான நன்மை தரும் செயல்களாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்..

© மு. பிர்தெளஸ் ரஷீத் 

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...