தியாகம்
தியாகம் என்பது மனித வாழ்க்கையின் யதார்த்தங்களின் மற்றொன்றாகும். ஒரு அழகான மாமரம் இருக்கிறது எனக்கொள்வோம். அது
ஒவ்வொரு வருடமும் சிறப்பாக காய்க்கக்கூடியது. அதன் காய்கள் கனிந்த பொழுதெல்லாம் சிலர்
அம்மரத்தை நோக்கி கல்லெறிந்து கனி பறிப்பர். அதை அறிந்து கொள்ளும் அறிவு அம் மாமரத்துக்குக்
கிடையாது. அதனால் அது மீண்டும் அடுத்தவருடமும் அதே போல் காய்த்து கனிகொடுக்கத்
தவறுவதில்லை. அவ்வாறே ஒரு தேனீ கூட்டம் தான் கஷ்டப் பட்டு கூடு கட்டி சேர்த்துவைத்த
தேனை, மற்றொரு மிருகமோ அல்லது மனிதனோ களவாடிச் சென்றதால்
அது மீண்டும் கூடு கட்டித் தேன் சேர்க்காமல் இருப்பதில்லை.
அதுபோலவே, வரலாற்றில் நடந்தேறிய பல்வேறு யுத்தங்களில் முன்னணிப் போராளியாக எதிரியை
சந்தித்து வெறியைப் பெற்றுக் கொடுத்த பலர் வெற்றியின் களிப்பை அனுபவிக்க உயிரோடிருந்ததில்லை.
ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாயும் தந்தையும், காலமெல்லாம் உழைத்து, கஷ்டப்பட்டு வளர்த்த
தனது பிள்ளை எதிர்காலத்தில் தம்மை எவ்வாறு நடாத்தும் என்பதை அறிந்து வைத்ததில்லை. அவ்வாறே
கோடி மக்களின் சுதந்திரத்துக்காக பாடுபட்டு எத்தனையோ அர்ப்பனங்களை செய்த அண்ணல் மோகன்தாஸ்
காந்தி அவர்கள் தான் சுதந்திரம் பெற்றுக்கொடுத்தவர்களில்
ஒருவராலேயே படுகொலை செய்யப்படுவேன்
என்பதை அறிந்திருந்ததில்லை. இப்படியாக உலக வாழ்க்கையிலும், மனித வரலாற்றிலும் நடைபெறும்
தியாகங்களின் பட்டியல் வரையறையின்றி நீண்டுகொண்டே போகும்.
ஒரு சாதாரண மனிதன் இப்படியாக தியாகங்கள் செய்வதை நாம் வியந்து நோக்கலாம். ஆனால்
மறுமைநாளை விசுவாசிக்கின்ற ஒரு முஸ்லீம் இப்படி நடந்து கொள்வதில் வியப்புகள் அதிகம்
இல்லை அல்லவா? அதற்கிணங்க இஸ்லாமிய
வரலாறு நெடுகிலும் பல்வேறு தியாகங்களும், அர்ப்பணங்களும், சேவைகளும் நிரம்பி
இருப்பதை யாரும் கண்டுகொள்ளலாம். அத்தகைய சேவைகளில் ஒன்றாகவே காத்தான்குடி எனும் நகரில்
அமைக்கப் பட்டுள்ள "இலங்கை முஸ்லீம்களின் தொல்பொருள் காட்சியகம்" அமைந்துள்ளமையும் காலம் கருதி சுட்டிக்காட்டப் படுவது தவறாகாது.
“முன் நிபந்தனைகளில்லாத”
எனும் அடை மொழியைக் கொண்டு ஆங்கில இலக்கியத்தில் சொல்லப் படுவது போன்று, இத்தகைய தன்னலம் பாராத சேவைகளினாலேயே சாக்கடைகள் நிறைந்த இந்த உலகம் சிறப்புற்று,
அழகு பெற்று, மிளிர்கிறது என்றால் அது மிகையாகாது.
இந்த தியாகமெனும் அம்சத்தை நாம் இலங்கை வாழ் முஸ்லீம்களின் நடைமுறை நிலைமைகளிலும்
பிரயோகித்துப் பார்க்கும் போது பல்வேறு தெளிவுகளும் தீர்வுகளும் பிறக்கலாம். காய்க்கும்
கனிமரத்துக்கு கல்லெறி படுவதுபோல்,
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும்
பல்வேறு சேவைகள் செய்த இலங்கை முஸ்லீம்களுக்கு அவ்வப்போது, பிரச்சினைகளும் துன்பங்களும் ஏற்பட்டு வந்துள்ளமையை வரலாற்று நெடுகிலும் கண்டு
கொள்ளலாம். ஆனாலும் முஸ்லீம்கள் தனிநபர்களாகவும், குழுக்களாகவும் அவ்வப்போது
பல்வேறு சேவைகளை பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் செய்து வந்துள்ளதையும், செய்து கொண்டிருப்பதையும் யாரும் மறுக்க முடியாது. இத்தகைய சேவைகளை சமூகத்தில் காணப்படுகின்றன மார்க்கத்தின்
அடிப்படையிலான மற்றும் பொதுவான பல அமைப்புகள் தங்களின் செயற்திட்டங்களில் ஒன்றாக செய்துவருவதும்
குறிப்பிடத்தக்கதாகும்.
அதேவேளை கடந்த காலங்களில் முஸ்லீம்கள் அனுபவித்த பல இன்னல்களையும் பிரச்சினைகளையும்
காரணம் காட்டியும், இன்னும் பல அம்சங்களை முன்வைத்தும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு பிரதிவிளைவாகவும், முஸ்லீம்கள் தங்களது
உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராட வேண்டும் எனும் பாங்கில் அரசியல் ரீதியான மற்றும் சமூக ரீதியான பல்வேறு முன்னெடுப்புகள்
மேற்கொள்ளப் பட்டுவருவது கண்கூடு. இத்தகைய முன்னெடுப்புகளுக்கு மத்தியில், நிபந்தனையில்லா தியாகிகள் எனும் அமைப்பில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும்
சேவைகள் செய்யக் கூடிய ஒரு அமைப்பின் தேவை சந்தர்ப்பம் கருதி முன்மொழியப்படுகிறது.
இலங்கை வாழ் குடிமக்களில் பெரும்பான்மையினராகக் கருதப்படுகின்ற சிங்கள மக்கள் புத்தமத
போதனையின் செல்வாக்கு காரணமாக அதிக மனித நேயம் கொண்டவர்களாக இருப்பது மறுக்க முடியாத
விடயமாகும். அதன் விளைவாக அவர்கள் மத்தியிலும் இத்தகைய நிபந்தனையில்லா சேவை செய்யக்
கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களின் சேவைகளுக்கு நன்றி பாராட்டும் விதமாக முஸ்லீம்கள்
மத்தியிலும் அத்தகை ஒரு குழுவினர் செயற்படுவது பிழையாகாது அல்லவா. நாம் இறைவனுக்காக
அவனது படைப்பினங்களுக்கு சேவை செய்கிறோம் எனும் அமைப்பில் அவர்கள் செயற்படலாம். அத்தகைய
சேவைகள் பெரும் முதலீட்டுடன் கூடியதான செயற்திட்டங்களை (Project) நறைவேற்றுவதாக அமைய வேண்டியதில்லை. மாறாக சிறு சிறு
அம்சங்களாக, தனி நபர்களாகவும் சிறு குழுக்களாகவும் செய்யக் கூடிய
செயற்பாடுகளாகவும் அமையலாம்.
மனநோயாளிகளாக தெருவிலே கைவிடப் பட்டிருக்கின்ற ஒரு மனிதப் பிறவியை அடைக்கலம் கொடுத்து, குணப்படுத்தி மறுவாழ்வளிப்பது,
ஆங்காங்கே பிச்சை வாங்கி வாழ்வாதாரம்
பெற்றுக்கொள்ளும் அந்தகர் ஒருவருக்கு பொருத்தமான வாழ்வாதார வழிகள் செய்து கொடுப்பது.
பேச முடியாத மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பொருத்தமான அமைப்பில் உழைக்கும் வழிகளை
உருவாக்கிக் கொடுப்பது, போன்றன முதல் பாதையில் காணக்கூடிய ஒரு குழியை நிரப்பி விடுவது, பாதையோர வடிகான்களை சரி செய்வது போன்ற இன்னோரன்ன தேவைகள் சமூகத்தில் மலிந்து கிடக்கின்றன.
இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் விடயங்களில் தியாகம் எனும் தொனிப் பொருளுடன்
ஈடுபடலாம். சிறு துள்ளி பெருவெள்ளமாவது போல் இத்தகைய சிறு சிறு பங்களிப்புகள் நாட்டுக்கு
பெரும் பயனை கொண்டுதரக்கூடியதாக அமையலாம் எனும் விடயமும் நாம் கருத்திற் கொள்ளத்தக்கதாகும்.
அதேவேளை ஒரு தனிமனிதன் தனக்கு வரும் தொல்லைகளை எவ்வாறு தடுத்துக் கொள்வது என்பது
பற்றிய அல்குர்'ஆன் முன்வைக்கும் ஒரு போதனை சிந்திக்கத்தக்கதாகும்.
"நல்லனவும், தீயனவும் ஒற்காகக் கூடியனவல்ல. (ஆதலால்) தீயனவற்றை மிகச் சிறந்த நல்லதைக் கொண்டு தடுத்துக்
கொள்ளுங்கள்." (41:34) எனக் அல்குர்'ஆன் கூறுகிறது. இந்தப்
போதனையுடன் கூடியதாக அதற்கு முன்னாலும் பின்னாலும் சொல்லப் பட்டுள்ள அம்சங்கள் நீண்ட
விளங்கங்கள் கொண்ட ஆழமான விடயங்கள் ஆதலால் மிகச் சுருக்கமாகவும் விளங்கொள்ளும் அமைப்பிலும்
இங்கு எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இதே அமைப்பிலான
போதனை, புத்த மதத்திலும், சைவ நூலான திருக்குறளிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அதனடிப்படையில்
முஸ்லீம் சமூகம் தனக்கு எதிரான செயற்பாடுகளை தடுத்துக் கொள்வதற்கான ஒரு சிறந்த வழிமுறையாகவும்
இத்தகைய தியாகத்தின் அடிப்படையிலான செயற்பாடுகளைக்
கொள்ளலாம். மேலும் அத்தகையவர்கள் தமது நம்பிக்கைக்கிணங்க மறுமைநாளில் ஈடேற்றம் பெற்றவர்களாகவும்
அமைவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.
அத்துடன் "அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் புரியுங்கள் எனப் போதிக்கும் அல்குர்'ஆன் வசனங்களுக்கும், மேற்சொல்லப் பட்ட அல்குர்'ஆன் வசனத்துக்கு மிடையில் எந்தவிதமான முன்னுரிமையோ ஏற்றத்தாழ்வோ இல்லை யாதலால், ஜிஹாத் புரிவது போன்றே முக்கியத்துவமுள்ள ஒரு விடயமே தனக்கு ஏற்படக் கூடிய தீங்குகளை
மிகச்சிறந்த நல்வழிகளைக் கொண்டு தடுத்த்துக் கொள்வதுமாகும் என்பதை யாராலும் மருத்துரைக்க
முடியாது. அத்துடன் இத்தகைய அமைப்பில் தமது சமூகத்துக்காக பாடுபடுவதும் ஜிஹாத்தின்
ஒரு வகையாகுமென்றால் அது மிகையாகாது.
No comments:
Post a Comment
We value your feed back