Saturday, January 22, 2022

நான்"

மனித வாழ்க்கையின் ஒரு யதார்த்தம் எனும் அடிப்படையில் மனிதனிடத்தில் காணக்கூடிய ஒரு முக்கிய பலவீனமாக "நான்" எனும் மமதையை எடுத்துக் கொள்ளலாம். இந்த “நான்” எனும் மமதை உலக வரலாற்றில் எத்துணை அட்டகாசங்களை அரங்கேற்றியிருக்கிறது என்பதை கட்டுக் காட்டாக எழுதிக்கொண்டே போகலாம். அதிலும் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் இந்த பலவீனத்தைப் போக்க இஸ்லாம் முன்வைக்கும் உன்னதமான ஓர் தீர்வையே உருமாற்றி அதை இந்த நான் எனும் மமதையை போசிப்பதற்காகப் பயன் படுத்திக் கொள்ளப் படுவம் அறியாமையை என்னவென்றுதான் சொல்வது.

 

ஆதி வரலாற்றில், ஆதாமுடைய பிள்ளைகளாகிய இருவர்களில் ஒருவரை மற்றவர் கொல்வதற்கு காரணமாக அமைந்ததும் இந்த "நான்" எனும் உணர்வேயாகும். இதுபற்றி திருக் குர்'ஆன் கூறுகின்ற வரலாற்றில்  குறிப்பிடப் படுவதற்கிணங்க (குர்'ஆன் 2:27) தான் செய்த நற்செயல் இறைவனால் அங்கீகரிக்கப் படாமல் போனதை காரணம் கட்டி தனது சகோதரனை அவன் கொலை செய்கிறான். அவ்வாறு தவறிழைத்த அவன், ஒரு காகத்தின் அறிவை விடவும் குறைந்த அறிவையே தான் பெற்றிருக்கிறேன் எனும் சிறுமையை உணர்ந்த போது, தனது தவறை எண்ணி வருந்தியதாக அந்த வரலாறு சொல்கிறது (2:31). இவ்வாறு அவன் வருந்திமை தான் உயர்ந்தவன், அறிவாளி எனும் மமதையின் காரணமாகவே அப்படி ஒரு தவறிழைத்து விட்டதை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. இது மனித வரலாற்றிலே நிகழ்ந்த முதலாவது பெரும் பிழையாகும். அவ்வாறே இந்த பிரபஞ்சத்திலே நிகழந்த முதல் மாறிழைப்பும் இந்த "நான்" எனும் மமதையின் காரணமாகவே நிகழ்ந்ததாக திருக்குர்'ஆன் வரலாறு சொல்கிறது (38:76). மேலும் "பிர்'அவன்" எனும் படுமோசமான ஆட்சியாளன் செய்த தவறும் "நான் சொல்வது மாத்திரமே சரியானது" எனக் கூறிச் செயற்பட்டதாகும் (குர்'ஆன் 40:26).   

 

அவ்வாறே மனித வரலாற்றில் நடந்தேறிய, நடந்தேறிக்கொண்டிருக்கும், இனவாதம், மொழிவாதம், பிரதேச வாதம், மதவாதம், நிறவாதம், குலவாதம், வர்க்கவாதம் எனும் இன்னோரன்ன பிரிவினைகளைக் காரணம் காட்டி மனித சமூகத்தில் அரங்கேற்றப்படும் இன்னோரன்ன அட்டகாசங்களுக்கும் அட்டூழியங்களுக்கும் பின்னல் மறைந்திருப்பதும் இந்த "நான்" எனும் மமதையும் அதன் வடிவங்களான "எனது", மற்றும்  "என்னை" போன்றானவுமாகும்  என்பதை யாராலும் மறுக்க முடியாது.

 

இந்த "நான்" எனும் மமதையே பாவங்களின் ஆணிவேர் ஆதலால், அதை களையும் விதமாகவே ஆதி மதங்களான சைவம், வைணவம், வேதாகமம், பெளத்தம் போன்ற இந்திய துணைக்கண்ட மாதங்கள் "இரு கைகூப்பி, தலை சாய்த்து” தனது தாழ்மையை வெளிப்படுத்துவத்தை வளமையாகக் கொண்டிருகிறது எனக் கூறுவது பிழையாகாது.

 

மேலே சொல்லப்பட்டவாறு. இந்த "நான்" எனும் துர்குணத்தின் விபரீதங்களை எடுத்தியம்பும் திருக்குர்'ஆன், அதன் 91ம் அத்தியாயத்தில், ஏழு முறை சத்தியம் செய்து "யார் தனது ஆன்மாவை தூய்மைப்படுத்திக் கொண்டனரோ அவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார் என அடித்துச் சொல்கிறது. இந்த வசனத்தில் திருக்குர்'ஆன் சொல்லும் அமைப்பு  "யார் தனது ஆன்மாவை வளர்த்துக் கொண்டனரோ" என்று சொல்வதாகவும் அமைந்திருப்பது ஈண்டு சுட்டிக்காட்டத்தக்கதாகும். அதனடிப்படையில் தனது ஆண்மாவை சுத்தப் படுத்துவதூடாக அதை வளர்த்துக் கொள்வது மற்றும் வளர்த்துக் கொள்வதனூடாக அதை சுத்தப் படுத்திக்கொள்வது எனும் இரு அமைப்பும் ஒன்றோடொன்று பொருந்தி வருவதாக அமைந்திருப்பதைக் காணலாம். அதற்கிணங்க, ஒரு மனிதன் தனது ஆன்மாவை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டிய மிக மோசமான ஒரு விடயமாக இந்த "நான்" எனும் அம்சம் உள்ளது எனக் கூறினால்  அது மிகையாகாது.

 

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது வாழ்க்கையில் இந்த "நான்" எனும் விடயத்தில் அவதானமாக இருந்துள்ளார்கள் என்பதை வரலாற்றுப் பதிவுகளில் காணலாம். புகாரி மற்றும் அபூதாவூத் ஆகிய கிரந்தங்களில் பதியப் பட்டுள்ள அறிவிப்புகளில் முஹம்மது நபியவர்கள் யுத்தங்களுக்காகவும், ஹஜ் உம்ரா கிரிகைகளுக்காகவும் பயணிக்கின்றபோது, உயர்ந்த மலைப்பாங்கான பிரதேசங்களினூடாக பயணிக்கின்ற போது "அல்லாஹ்வே மிகப் பெரியவன்" என தக்பீர் சொல்லும் வழமை உடையவராகவும், தாழ்ந்த நிலத்தினூடாகச் செல்லும் பொது "தஸ்பீஹ்" (இறைவனை தூயவன் எனத் துதித்தால்) செய்யும் வளமை உடையவராகவும் இருந்த்தார் எனப் பதியப் பட்டுள்ளது. இவ்வாறு உயர்ந்த இடத்தினூடாக பயணிக்கும் போது தக்பீர் சொல்வதில் உள்ள நியாயம் என்னவாக இருக்கும் எனத் தேடிப்பார்த்தால், சமூகத்துக்கு தலைமை தாங்கும் ஒருவன் உயரமான நிலத்தினூடாக போகும் பொழுது தன்னை விடவும் உயர்ந்தவன் அந்த இறைவன் என்பதை ஞாபகப் படுத்திக்க கொள்வதாக அது அமைந்திருப்பதைக் காணலாம்.

 

அவ்வாறே யுத்தங்களிலே பகைவரை அழித்து வெற்றிவாகை சூடிய போதும் "அல்லாஹ்வே மிகப் பெரியவன்" என தக்பீர் சொல்லி இறைவனை ஞாபகப் படுத்துவது, பகையை வென்ற நானல்ல பெரியவன் என்பதை வலியுறுத்திடுவதாக அமைந்திருப்பதைக் காணலாம். இதே அமைப்பிலேயே உணவுக்காக ஒரு உயிர்ப்பு பிராணியை அறுத்துக் கொல்லுகின்றபோதும் "தக்பீர்" சொல்வது வழிமுறையாக அமைந்திருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

 

இவ்வாறாக "தக்பீர்" சொல்லப்படும் எல்லா சந்தர்ப்பங்களையும் எடுத்து நோக்கினால் அது நான் எனும் மமதையையும், "எனது" எனும் அகங்காரத்தையும் இல்லாமல் ஆக்கும் அமைப்பில் அமைந்திருப்பதைக் காணலாம். ஆனால் இதே "தக்பீரை" சொல்லிக்கொண்டே "நான்" எனும் அகங்காரத்துடன் பலர் தனியாகவும் குழுக்களாகவும் செயற்படுவதை காணும் பொழுது அவர்களின் அறியாமையை என்னவென்றுதான் சொல்வது.

அறியாமையின் இறுதி முடிவு சுட்டெரிக்கும் நரக நெருப்பும், வேதனைகளுமாகும் என்பதை பயந்து கொள்கின்றவர்கள் மாத்திரமே அறியாமையை போக்கிக் கொள்ள முயரசிப்பர் என்பது வெள்ளிடை மலை யாகும்.

அத்துடன் "நான்" எனும் மமதை பற்றியும் அதன் பாரதூரம் பற்றியும் பேசுகின்றபொழுது, அதனால் ஏற்படும் தீங்கைவிட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்லாம் போதிக்கும் இன்னொரு உன்னத போதனையும் ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும். அதுதான் "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" எனும் தாரக மந்திரமாகும்.

 

இந்த மந்திரம் திருக்குர்'ஆனின் 2ம் அத்தியாயம், 152ம் வசனத்தின் ஒரு பகுதியாகும் என்பது முதற்கண் குறிப்பிடத்தக்கதாகும். அதன் அர்த்தமாவது "நாம் இறைவனுக்கு சொந்தமானவர்கள், அவனிடத்திலேயே நாம் திரும்பிச் செல்வோம்" என்பதாகும். வாழ்க்கையிலே துன்பங்களும் கவலைகளும் ஏற்படும் பொழுது இந்த மந்திரத்தை உச்சரிக்குமாறு திருக்குர்'ஆன் போதிக்கிறது.             

 

மனித வாழ்க்கையிலே ஏற்படும் கவலைகளும் துன்பங்களுக்கும் பின்னால் "நான்" மற்றும் "எனது" எனும் உணர்வு அமைந்திருப்பதை நிகழ்வுகளை சற்று ஆழ்ந்து நோக்குகின்றபோது கண்டு கொள்ளலாம். இழப்புகளும் இடர்பாடுகளும் ஏற்படும் போதே கவலை ஏற்படுகிறது. அது தன்னைச் சார்ந்ததாக அமைந்திருக்கும் போதே தனக்கு கவலை ஏற்படுகிறது. அதனால்தான் துன்பத்திலிருந்து மீழ்ச்சிபெற வழிகாட்டிய கெளதம புத்தர் "எனது" எனும் உடைமைப் பற்றைவிட்டும் நீங்கிட போதித்தார். இதே அம்சத்தை வேறுவிதமாக சொல்வதாகவே "நாம் எல்லாம் இறைவனுக்கு சொந்தமானவர்கள்" எனும் அம்சம் அமைந்திருப்பது வியக்கத்தக்கதாகும். (அதாவது, புத்த மதப் போதனைகளின் முக்கால் பகுதியை ஒரே வசனத்தில் இஸ்லாம் முன்வைப்பதாகும்).    

 

ஒரு மனிதனுக்கு கவலை ஏற்படும்போது அவன் இரண்டு விதமான தீர்மானங்களை எடுக்கலாம். ஒன்று கவலையின் காரணமாக வருந்தி தன்னை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கிக் கொள்ளலாம். அல்லது தனது கவலையை ஆத்திரமாக அடுத்தவர்கள் மீது பிரயோகிக்கலாம். இந்த இரண்டு தீர்மானங்களையும் அவன் "நான்" மற்றும் "எனது" எனும் அடிப்படையிலேயே மேற்கொள்கிறான். இந்நிலையில் "நான் அல்லாஹ்வுக்கு சொன்தமானவன்" என அவன் தனக்குத் தானே ஞாபகப்படுத்திக்கொள்ளும் பொழுது அவனது கவலையின் அடிப்படையே இல்லாமல்போய் கவலையினால் ஏற்படும் துன்பம் அவனை விட்டும் நீங்க காரணமாக அமைகிறது. அதனடிப்படையில் அவன் ஆத்திரபட்டு தனது துன்பத்தை மேலும் அதிகரித்துக் கொள்வதை அல்லது தனது ஆத்திரத்தை  பிறர் மீது பிரயோகிப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ள துணை புரிகிறது.  இந்தியாவில் வாழ்த்த ஒரு துறவி தனக்கு கவலை ஏற்படும் சந்தர்ப்பங்களில் "அல்லாஹ் மாலிக்" எனும் வாசகத்தை உச்சரிப்பதும் இதே அர்த்தத்திலாகும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப் படுவது சாலப் பொருத்தமாகும். 

 

அதேவேலை "இஸ்லாம்" என்றால் கீழ்ப்படிதல் என அர்த்தமுண்டு. அந்த கீழ்ப்படிதல்  "நான்" எனும் அகங்காரம் உடையவனுக்கு பொருந்திவராத விடயம் என்பது சொல்லி விளங்க வேண்டிய ஒரு அம்சமல்லவே. இத்தகைய பல்வேறு அமைப்புகளில் இஸ்லாம் மனிதனிடத்தில் காணப்படும் "நான்" எனும் அகங்காரத்தை போக்கி அவனை சிறந்த ஒரு உத்தம புருஷனாக வாழ வழிகாட்டுகிறது என்பதை யாவரும் நன்கு விளங்கி செயலாற்றுவது இக்கால கட்டத்தில் அதி முக்கியத்துவம் பெறுகிறது. 

அதனடிப்படையில் "அல்லாஹு அஃபர்" என உச்சரிக்கின்ற ஒவ்வொருவரும், நானல்ல பெரியவன் அல்லாஹ்வே மிகப்பெரியவன், எனது உடமைகளல்ல முக்கியத்துவம் வாய்ந்தன, அல்லாஹ்வின் கட்டளைகளே, எனது கருத்துக்களல்ல சிறந்தவை, அல்லாஹ்வின் போதனைகளே, எனது இயக்கமோ கட்சியோ, வழிமுறையே அல்ல உன்னதமானவை, அல்லாஹ் வழங்கிய வழிகாட்டல்களே எனத் தனக்குத் தானே ஞாபகப் படுத்திக்க கொள்வது இம்மையிலும் மறுமையிலும் பயன் தரத்தக்கது  எனும் விடயம் தெரிந்து, தெளிந்து, பிறருக்கும் போதிக்கப் படவேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்க முடியாது.


No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...