Saturday, January 22, 2022

 தீண்டத்தகாதவர்

இஸ்லாத்திலே தீண்டத்தகாதவர் என மனிதர்கள் யாரையும் பிரித்து வைப்பதில்லை என்பது யாவரும் அறிந்ததே. ஆனாலும் அல்குர்'ஆன் தீண்டத்தகாதவர் பற்றி சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கதாகும். அந்த தீண்டத்தகாதவர்கள் முஸ்லீம் சமூகத்துக்கு பாரிய நாசத்தை ஏற்படுத்துவதுடன், மக்களை நரகில் தள்ளிவிடும் சாதித்திட்டிங்களையும் அரங்கேற்றுகின்றவர்கள் என்பது, முஸ்லிமாக தன்னைக் கருத்திக்கொள்ளும் யாரும் தெரிந்திருக்க வேண்டிய, சிந்திக்கத்தக்க முக்கிய விடயமாகும்.

 

அல்குர்'ஆன் சொல்லியிருக்கும் தீண்டத்தகாதவன் "ஸாமிரி" ஆகும். (பார்க்க 7:95-97). எவ்வாறு சாத்தான்களின் தலைவனாக இப்லீஸ் இருக்கிறானோ, அதுபோல் தீண்டத்தக்கதவர்களின் தலைவனாக "ஸாமிரி” என்பவனைக் கொள்ளலாம். "ஸாமிரி" யின் வழிமுறையைப் பின்பற்றி சமூகத்தை பிழையான வழியில் இட்டுச்செல்லக்கூடிய அவனது சகாக்கள் பலர் முஸ்லீம் சமூகத்த்திலும் தோன்றலாம் என்பதை ஒரு நபிமொழி சுட்டிக்காட்டுவதாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கதாகும். “நீங்கள் உங்களுக்குமுன் வேதம் அருளப்பட்டவர்களின் வழிமுறைகளை, சானுக்கு சான், முழத்துக்கு முழம் பின்பற்றுபவர்களாக இருப்பீர்கள், அவர்கள் ஒரு உடும்பும் பொந்தில் நுழைந்திருந்தால் நீங்களும் அதுபோல் நுழைவீர்கள்" (புஹாரி-3456,முஸ்லீம்-2669) எனச் சொல்லியிருப்பது மேற்சொன்ன அம்சத்தை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. அவ்வாறு தோன்றக்கூடிய ஸாமிரீக்கள் யார் என்பதை இனங்கண்டு கொள்வதற்கு, அல்குர்'ஆனில் சொல்லப்பட்டுள்ள ஸாமிரி” (7:95-97)  எத்தகையவன் என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

 

“ஸாமிரி” என்பவன் மூஸா நபி (அலை) அவர்களை ஈமான் கொண்ட ஒரு நல்லடியாயானாக இருந்தவனாவான். அவன் மூஸா நபி அவர்கள் சமூகத்தின் மத்தியில் இருக்கும்வரை மிகச் சிறந்த மனிதானாகாவே காணப்பட்டான் என்று கருதலாம். இல்லாவிட்டால், அவனை பின்பற்றி அவன் சொல்வதை யாரும் கேட்டுநடந்திருக்க மாட்டார்கள் அல்லவா! அவன் ஈமான் கொள்ளுமுன்னர் மூஸா நபி (அலை) அவர்களுடன் போட்டியிட்ட சூனியக்காரர்களை சேர்ந்தவர்களில் ஒருவனாக அல்லது அந்த பந்தயத்தை பார்வையிட வந்தவர்களில் ஒருவனாக  இருந்திருக்கலாம். "ஸாமிரி" எனும் அரபுச் சொல்லின் தமிழ் அர்த்தம் பொதுநிறம் என்பதாகும். அஃதாவது, சிகப்பு நிறமாகவும் (வெள்ளை) இல்லாமல், கருமை நிறமாகவும் இல்லாமல், இரண்டுக்கும் பொதுவான நிறத்தை உடடையவன் என்பது அர்த்தமாகும். அதற்கிணங்க "ஸாமிரி" என்பனவன் இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவன் என்பதாகவும் ஒரு விளக்கமுண்டு என்பது விரிவு கருதி சுருக்கமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

 

அதேவேளை, யாகூப் நபி (அலை) அவர்கள் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவராதலால் அவரது சந்ததியினர் சிவப்பு (வெள்ளை) நிறத்தவர்களாக இருந்திருக்கலாம். அத்துடன் எகிப்தில் வாழ்ந்த பிர்'அவ்னின் இனத்தைச் சேர்ந்தவர்கள் "கிப்தீக்கள்" என அழைக்கப்படுவர். அவர்கள் கருமை நிறமுடையவர்களாவர். இந்த இரண்டு நிறத்துக்கும் இடைப்பட்ட நிறத்தை உடையவனாக இருந்தமையால் "ஸாமிரி" என அழைக்கப்பட்டிருக்கலாம். அது ஒருவனை மாத்திரம் குறிக்காது,  அன்றிருந்த ஒரு இனத்தாரைக் குறிக்கப் பயன்படுத்திய பொதுப்பெயராக இருந்தது எனக் கருதுவதே பொருத்தமாகும். இத்தகைய பல்வேறு அம்சங்கள் "ஸாமிரி" என்பவன் பனூ-இஸ்ராஈல் கோத்திரத்தைச் சேராத, அதேவேளை மூஸா நபி (அலை) அவர்களை ஈமான் கொண்ட ஒருவனாக இருந்திருக்க வேண்டும் என்பதை சுட்டுவனவாக உள்ளன. பிற்காலத்தில் அவன் தீண்டத்தகாதவனாக கருத்தப்பட்டமையால் அவனைப்பற்றி யாரும் அலட்டிக் கொள்ளும் நிலை இருக்கவில்லை. ஆதலால் அவனைப்பற்றிய தெளிவான தகவல்கள் குறித்து வைக்கப்படவில்லை என்பது கருத்தில்  கொள்ளத்தக்கதாகும்.

 

மேற்சொன்ன பின்னணிகள் காரணமாக "ஸாமிரி" என்பவனிடத்தின் இறைவேதத்தின் முக்கிய அம்சங்கள் ஆழப்பதிந்திருக்கவில்லை எனலாம். அதேவேளை, தனது முன்னோர்கள் மற்றும் சமூக சூழல் என்பவற்றினூடாக கிடைக்கப் பெற்ற மத நம்பிக்கைகள் அவனிடத்தில் காணப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இந்நிலையில் மூஸா நபி (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி தூர்சீனா மலைக்கு தியானம் செய்வதற்காக சென்றபோது “ஸாமிரி” தனது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தான்.

 

மூஸா நபி (அலை) அவர்களின் வழிகாட்டுதலின்கீழ் பனூ இஸ்ராஈல்கள் எகிப்தை விட்டும் வெளியேறிய சந்தர்ப்பத்தில், பிர்'அவனும் அவனது சமூகத்தினரும், நீரில் மூழ்கி அழிந்துவிட்டனர். எனவே அவர்கள் விட்டுச் சென்ற செல்வங்களை எல்லாம் மூஸா நபியைப் பின்பற்றியவர்கள் சேகரித்துக்கொண்டனர் (பார்க்க அல்குர்'ஆன் 20:7).

 

இப்படியாக மூஸா நபியைப் பின்பற்றக்கூடியவர்களிடத்தில் தங்கம் வெள்ளி மற்றும் ஏனைய உலோகங்கள் இருப்பதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட “ஸாமிரி”, ஏற்கனவே மக்கள் மூஸா நபியிடம் வேண்டிக்கொண்ட போது, மூஸா நபி அவர்கள் செய்துகொடுக்க மறுத்துவிட்ட கடவுளை (பார்க்க அல்குர்'ஆன் 7:138) மிகவும் சிறப்பாக செய்து கொடுத்தான். அவ்வாறு அவன் செய்த கடவுள் மாட்டுக்கு, மாடுபோல் சத்தமிடக்கூடிய ஒரு தொழில் நுட்பத்தையும் புகுத்தியிருந்தான் (பார்க்க அல்குர்'ஆன் 20:88). இதனை ஒரு ரோபோ தொழில்நுட்பம் என்று அழைப்பது பொருத்தமாகும். அந்த ரோபோ-மாடு ஏற்கனவே தங்களுக்கு வழிபட ஒரு கடவுள் வேண்டும் எனும் தேவையுடன் இருந்த பனூ-இஸ்ராஈல் சமூகத்தினருக்கு, மிகவும் சிறப்பான கடவுளாகத் தென்பட்டது. அதிலும் வியக்கத்தக்க விடயம் என்னவெனில் மூஸா நபி (அலை) அவர்களின் சகோதரரான ஹாரூன் நபி (அலை) அவர்களின்  மத்தியில் இருந்தும்கூட, அவரால் அந்த கடவுள்மாடு-வழிபாட்டை எந்தவிதத்திலும் தடுத்து நிறுத்த முடியாமையாகும் (பார்க்க அல்குர்'ஆன் 7:150). இப்படியாக இரண்டு நபி மார்கள் தங்கள் மத்தியில் இருக்கின்ற நிலையிலேயே, மக்களை மயக்கி அவர்களின் செல்வங்களை யெல்லாம் தன்வசப்படுத்தி, அதே மக்களை வழிகெடுத்து, சீரழித்து, நரகில் தள்ளிவிட, மிகவும் சூட்சுமமாகவும், மதிநுட்பத்துடனும், செயல்பட்ட மனிதனே "ஸாமிரி" என்பவனாவான். (“ஸாமிரி” எவ்வாறு அந்த குரல்கொடுக்கும் தங்க-மாட்டுச்-சிலையை செய்தான் என்பது பற்றி அல்குர்'ஆன் விளக்க நூல்களில் சொல்லப்பட்டுள்ள எந்த விளக்கத்துக்கும், எந்தவித ஆதாரமும் இல்லை என்பது சந்தர்ப்பம் கருதி சுருக்கமாக சுட்டிக்காட்டப்படுகிறது.)

 

ஈஸா நபி (அலை) அவர்களுக்கு முந்திய காலத்திலேயே, உலோகத்தை உருக்கி அதனை மாட்டின் உருவில் வார்த்து, அதற்குள் சத்தமிடக்கூடிய ஒரு அம்சத்தையும் புகுத்தி, மிகக் குறுகிய காலத்தில் (40 நாற்களுக்குள்) செய்து முடிக்க முடியுமாக இருந்தால், "ஸாமிரி" எவ்வளவு திறமை மிக்கவனாக இருந்திருக்க வேண்டும். அந்த திறமையை எதிர்வரக்கூடிய யுத்தத்தில் பயன்படுத்தக்கூடிய ஆயுதத் தயாரிப்பதற்கு அல்லது வேறு வாழ்க்கை அம்சத்துக்கு பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா. அப்படியெல்லாம் செய்ய அவனுக்கு தோன்றவில்லை (பார்க்க அல்குர்'ஆன் 20:96). இறைவழிகாட்டலின் தொடர்புகள் எதுவுமே இல்லாமல், ஒரு நபிக்கு மேலாக தான் நினைப்பதே சரி என்று அவன் செயற்பட்டமையே, மார்க்கம் போதிக்காததை மக்களை திருப்திப்படுத்த்துவதற்காக செய்து கொடுத்ததன் பின்புல எனலாம்.  

 

இவ்வாறு, ஒரு நபி தனது சமூகத்தை விட்டுச்சென்ற சில நாற்களுக்குள்ளேயே "ஸாமிரி" என்பவனால் அந்த சமூகத்தை வழிகெடுக்க முடியுமாக இருந்தால், மற்றொரு நபி தோன்றி ஆயிரம் வருடங்கள் கடந்தபின்னர் எத்துணை “ஸாமிரீக்கள்” தோன்றலாம் என்பதை சொல்லவும் வேண்டுமா? அவ்வாறான சாமிரீக்கள் தனது சமூகத்தாரிலும் தோன்றுவார்கள் என்பதை, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மறைமுகாமாக உணர்த்தியுள்ளதை ஏற்கனவே கண்டோம் (பார்க்க புஹாரி-3456,முஸ்லீம்-2669). இந்த ஸாமிரீக்களைப் போல் மதத்தின் பெயரால் மக்களை வழிகெடுக்கக்கூடி ஒருவனாகவே "தஜ்ஜால் என்பவனும் இருப்பான் என்பது சந்தர்ப்பம் கருதி சுட்டிக்காட்டப்படுகிறது.

 

அன்று மூஸா நபி (அலை) அவர்கள் தனதுகால “ஸாமிரீக்கு” வழங்கி தண்டனையே தீண்டத்தகாமையாகும் (பார்க்க அல்குர்'ஆன் 20:97) அத்தகைய தீண்டத்தகாமை தண்டனைக்குரிய ஸாமிரியின் வாரிசுகள் விடயத்தில் கரிசனை செலுத்துவது காலத்தின் முக்கிய தேவையாகும் என்றால் மிகையாகாது. இந்த தீண்டத்தகாத வர்க்கத்தினர் செய்யும் கைங்கரியம் என்னவாக இருக்கும்? அதுதான், மக்களை ஏமாற்றி, அவர்களின் செல்வங்களை மார்க்கத்தின் பெயரால் தன்வசப்படுத்தி, அதே செல்வங்களைக் கொண்டே மக்களின் ஆசை, அவர்களின் தேவை, சந்தர்ப்பசூழல் போன்றனவற்றை சாதகமாகக் கொன்டு, மார்க்கம் போதிக்காத அம்சங்களை மார்க்கமாக காட்டி, அவர்களை வழிகெடுத்து, சமூகத்தை சீரழித்து, சின்னாபின்னப்படுத்தி, நரகில் தள்ளிவிடும் திட்டங்களில் மிகத்திறமையுடனும், மதிநுட்பத்துடனும் செயற்படுவதாகும்.

 

இந்த “ஸாமிரீக்களின்” வலையில் சிக்காமல் இருப்பதற்கு முதற்கண் தேவைப்படுவது, எது சரி எது பிழை எனும் தெளிவாகும். எது சரி எது பிழை என்பதை தெளிவு படுத்தக்கூடிய இரண்டு முக்கிய அம்சங்களே அல்குர்'ஆனும் நபி வழியுமாகும். அல்குர்'ஆனைப் பொறுத்தவரை அதன் மொழி தெரியாமை பலரது பலவீனமாக இருக்கலாம். ஆனாலும் அல்குர்'ஆன் தெளிவுரைகளை செவிமடுப்பதில் பொடுபோக்காக இருப்பதும், அல்குர்'ஆன் மொழிபெயர்ப்பை வாசிக்காமல் இருப்பதும் எந்தவிதத்திலும் நியாயம் கற்பிக்க முடியாத தவறுகள் எனலாம். இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் வாழ்ந்த பலர், அல்குர்'ஆன் மொழிபெயர்ப்பை மாத்திரம் வாசித்தபின், இஸ்லாத்தைப் புரிந்து, இஸ்லாத்தை தழுவினார்கள் என்றால், இஸ்லாத்தைப் பற்றி ஏற்கனவே தெரிந்த முஸ்லீம்களுக்கு அல்குர்'ஆனினூடாக தெளிவுகள் கிடைக்காமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை அல்லவா? அவ்வாறு அல்குர்'ஆணை வாசிக்கும்பொழுது சந்தேகங்களும் தெளிவின்மைகளும் எழுவது சாதாரணமே. அது அரபு தெரிந்தவர்களுக்கும் ஏற்படக்கூடிய சிக்கலாகும். அத்தகைய சந்தேங்களை கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது சந்தர்ப்பம் கருதி சுருக்கமாக சுட்டிக்காட்டப்படுகிறது.  

 

அதன் மறுபக்கமாக, சிலர் நபி-வழி எனும் பெயரில் நபிவழிக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுவது யாரும் சித்தித்துணரத்தக்க முக்கிய விடயமாகும். நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைகளும் போதனைகளும் ஹதீஸ் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே. இந்த வழிமுறைகளுள், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றாற்போல சரியான நபிவழியைக் கண்டறிந்து கடைப்பிடிக்க, அதிக முயற்சியும், அதிக ஈடுபாடும் தேவையாகும். அவ்வாறே அல்குர்'ஆனில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை முழுமையாக அறிந்த ஒருவராலேயே ஹதீஸ்களை சரியாக விளங்கிக் கொள்ள முடியும். மேலும் ஹாதீஸ்களை அதிகம் தெரிந்த ஒருவராலேயே எந்த சந்தர்ப்பத்தில் எந்த நபி விழியைப் பின்பற்றுவது என்பதை தீர்மானித்துக்கொள்ள முடியும். இந்த இரண்டு அம்சங்களும் எல்லோராலும் செய்யக்கூடிய விடயமாகாது அல்லவா. ஆதலால் தொடர்ந்தேர்ச்சியான தேடலும், தொடர்ந்தேர்ச்சியான முயற்சியுமே இதற்கு துணை செய்வதாக அமையும் என்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.   

 

இந்த தொடர்ந்தேர்ச்சியான தேடலும், தொடர் முயற்சியும் இறை பரீட்சையில் தேறுவதற்கான முக்கிய அம்சம் எனலாம். அதை நிரூபித்தாற்போல் அறிவைத் தேடுவதன் முக்கியத்துவமும் சிறப்பும் போதிக்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கதாகும் (பார்க்க அல்குர்'ஆன் 9:122, அபூ தாவூத் 3641). உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையே என அல்குர்'ஆன் கூறுகிறது (67:2). அந்த பரீட்சையின் முக்கிய அங்கமாகவே அறிவைத் தேடலும், அதற்கான முயற்சியும் அமைந்திருக்கிறது என்றால் மிகையாகாது. அதனை நிரூபிக்கக்கூடிய பல வாழ்க்கை உதாரணங்கள் இருக்கின்றன. ஒரு வியாபாரி தனது வியாபாரத்தில் முன்னேறியதற்கு பின்னால் சில வியாபார இரகசியங்கள் இருக்கும். அந்த இரகசியங்களை தெரிந்து கொண்டால் அவனைப் போல் மற்றவர்களும் இலகுவாக முன்னேற முடியும். அவ்வாறே, நவீன சாதனமொன்றான “ரோபோக்களைக்” எடுத்துக் கொண்டால் அந்த ரோபோக்களுக்கான போட்டியொன்றில் ஒரு ரோபோ சிறந்ததாக தெரிவு செய்யப்படுமானால், அதற்குக் காரணம் அந்த ரோபோவுக்குத் தேவையான தகவல்கள் சிறப்பாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளமையாகும். ஆனால் மனிதனோ சுயமாக உள்ளீடு செய்துகொள்ளக் கூடியவனாவான். அஃதாவது, சுயமாக கற்றுக்கொள்ளக் கூடியவனாவான். எனவே அவன்  முக்கிய பல அம்சங்களை தெரிந்து வைத்திருப்பது, பரீட்சையின் ஒரு அங்கத்தை  பூர்த்தி செயதது போலாகும் எனலாம். அதேவிடயம் ஒரு நபி மொழியில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது. “அறிவைத்  தேடி புறப்படுகிவனுக்கு சுவர்க்கத்தை அடையும் வழி இலகுவாக்கிக் கொடுக்கப்படும்” (அபூ தாவூத் 3641, திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத்). அதே விடயத்தை அல்குர்'ஆனும் ஆமோதிப்பதாக உள்ளதையும் காணலாம் (பார்க்க அல்குர்'ஆன் 35:28). அதன் மறுபக்கமாக சிலர், விடயங்கள் தெளிவாக தெரிந்திருந்தும், மனமுரண்டாக மறுக்கும்போது பாவியாக அல்லது காபிராக மாறுகின்றனர். அதை இறைவனே நன்கறிந்தவனாவான். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் ஒருவன் சத்தியத்தை தெரிந்து கொள்ளவதில் பொடுபோக்காக இருப்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப ஒன்றில் சுவர்க்கத்தை நோக்கி அல்லது நரகத்தை நோக்கி அவனை நகர்த்துவதாக அமையும் என்பது சந்தர்ப்பம் கருதி சுருக்கமாக சுட்டிக்காட்டப்படுகிறது.  

 

அதுபோலவே, ஒரு மனிதன் தனக்கு வழங்கப்பட்ட சுயஅறிவைப் பயன்படுத்தி எது சரி எது பிழை என்பதை அறிந்து கொள்வது, இறை பரீட்சையின் மகத்தான அம்சம் எனலாம். பல்வேறு உன்னதமாமான கருவிகளை உருவாக்க முடிந்த மனிதனால் இதுவரை சாதிக்க முடியாத அல்லது சாதிக்கவே முடியாத ஒரு விடயமே மனிதனின் மூளையும் அதன் சிந்திக்கும் திறனுமாகும். அதே பகுத்தறியும் திறனைப் பயன்படுத்தியே அன்று இப்ராஹிம் நபி (அலை) அவர்கள் சிறுவனாக இருந்தபொழுது, சிலை வணக்கம் பிழையானது என்பதைக் சிந்தித்துணர்ந்தார்கள் (பார்க்க அல்குர்'ஆன் 6:74-79). அதுவே இறைவன் அவரை தேர்ந்தெடுக்க காரணமாகியது என்றால் மிகையாகாது. வாழ்க்கையில் எத்தனையோ அம்சங்களில் எது சரி எது பிழை, எது நல்லது எது கேட்டது, எது சிறந்தது எது தாழ்ந்தது, எது பெறுமதிமிக்கது எது பெறுமதியற்றது, என பல்வேறு அம்சங்களை தெரிந்து கொள்வதற்காக தனது பகுத்தறிவை பயன்படுத்தக்கூடிய மனிதன், எது சத்தியம், எது அசத்தியம் என்பதை அறிந்து கொள்ள தனது பகுத்தறிவை பயன்படுத்தாமல் இருந்தால், அவன் எதற்கு உதவுவான் என்பதை சொல்லவும் வேண்டுமா? அந்த நரகத்துக்கு சிந்திக்கும் திறன் இருக்குமென்றால் இந்த அறிவுகெட்ட ஜென்மங்களை தன்பக்கம் நெருங்கவிடுமா என்பது கேள்விக்குரிய அம்சமாகும்.   

 

அடுத்து ஒரு மனிதனுக்கு எது சரி எது பிழை என்பதை தெரிந்துகொள்ளத் துணை செய்வது இறைவனுடனான தொடர்பாகும். இந்த விடயத்தை ஒரு நபிமொழி சுட்டிக்காட்டுவதாக   உள்ளது. அஃதாவது "நலவு என்பது அதை நீ செய்தால் உனது உள்ளம் ஆறுதல் அடையும், தீமை என்பது, அதை செய்தால் உனது உள்ளம் உறுத்திக்கொண்டே இருக்கும்" என்பதாகும் (அஹ்மத் 18028, தாராமி). அதன்படி, தனது உள்ளம் சரியெது, பிழையெது என்பதை காட்டித்தரும் என்பதை விளங்கிக்கொள்ளலாம். அதுபோல், இறைவனுடனான தொடர்பு சிறப்பாக அமையும் பொழுது, அறிவியல் சார்ந்த அம்சங்களில் சரியெது, பிழையெது என்பதை உணர்ந்து கொள்ள துணை செய்யும் என்பதை விளங்கிக் கொள்ளலாம். இதே விடயத்தை “இமாம் அபூ ஹாமித் கஸ்ஸாலி” அவர்களும் இன்னும் பல மகான்களும் மிகத்தெளிவாக விளக்கியுள்ளனர் என்பது விரிவு கருதி சுருக்கமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

 

ஒருவன் இறைவனிடத்தில் நேர்வழியைக் கேட்டு பிரார்த்திக்கும் பொழுது, "கோபத்துக்குள்ளானவர்களை விட்டும், மேலும் வழி தவறியவர்களை விட்டும்" எனும் இரண்டு அம்சங்கள் சேர்த்து சொல்லப்பட்டிருப்பது (பார்க்க அல்குர்'ஆன் 1:06)    மார்க்கத்தை பின்பற்றக் கூடியவர்களிடத்தில் இந்த இரண்டுவகை தவறுகளும் நடக்கலாம் எனபதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. கோபத்துக் குள்ளானவர்களுக்கு உதாரணமாக சனிக்கிழமை நாளில் மீன் பிடிப்பது தடுக்கக்கப்பட்ட கூட்டத்தினரைக் கூறுலாம். அவர்கள் சனிக்கிழமையில் மீன் பிடிக்காமல் வலைகளைக் கட்டி வைத்து, அதே மீன்களை ஞாயிற்றுக் கிழமை பிடித்தனர் என்பதாக வலாற்றுக் குறிப்புகள் கூறுன்கின்றன. அதன் காரணமாக அவர்கள் குரங்குகளாக மாற சபிக்கப்பட்டனர் என அல்குர்'ஆன் கூறுகிறது (2:65). இப்படியாக மார்க்கத்தின் அம்சங்களை தங்களது மனோ இச்சையின் பிரகாரம் மாற்றி "பத்வா" கொடுக்கக் கூடியவர்கள் சமூகத்தில் தோன்றுவார்கள் என்பதை, பல நபிமொழிகளில் தீர்க்க தரிசனம் கூறப்பட்டிருக்கிறது. அவைகளில் ஒன்றை மேலே கண்டோம். அத்துடன் மார்க்கத்தை பின்பற்றுவதில் எல்லை மீறிச் செல்வதை "வழி தவறியவர்கள்" என்பது குறிக்கிறது. அவர்கள் மார்க்கத்தின் சில போதனைகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதனால், இன்னும் பல மார்க்கத்தின் போதனைகள் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகும், அல்லது முக்கியமற்ற அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது முக்கியத்துவம் மிக்க அம்சங்கள் விடுபட்டுவிடும். இந்த இரண்டுவகை வழிகேடும் மார்க்கத்தைப் பின்பற்றுவதில் ஏற்படலாம் என்பதனாலே, அவற்றிலிருந்து சதாவும் பாதுகாப்புத்தேடும் வழிமுறையை அல்குர்'ஆன் கற்றுத்தந்துள்ள தைக் காணலாம். (1:7). அதுபோல் இந்த  "ஸாமிரி" கூட்டத்திலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள துணைசெய்யும் மற்றொரு து'ஆ (பிரார்த்தனை)  "இறைவா எங்களுக்கு சரியை சரியெனவும். பிழையைப்  பிழையெனவும், காட்டித்தருவாயாக" என்பதாகும் (உமர் (றழி) ஓதியது - இஹ்யா உலூமுத் தீன்). இதை பலரும் ஓதினாலும்கூட, அவர்கள் மனப்பூர்வமாக அதை ஓதுகின்றனரா அல்லது மனமுரண்டாக ஒதுகின்றனரா என்பதே கேள்விக்குரிய அம்சம் எனலாம்.

 

இந்த தீண்டத்தகாத "ஸாமிரிக்களின்" வாரிசுகளின் கைங்கரியங்களிற் சிலவற்றை பின்வருமாறு சுருக்கமாகச் சொல்லலாம். மார்க்கம் சொல்லாதனவற்றை மார்க்கம் எனப் போதிப்பது, மார்க்கத்தில் அற்பமான அம்சங்களை பெரிதுபடுத்திக்காட்டி மக்களை குழப்பிவிடுவது, மார்க்கம் போதிக்கும் அம்சங்களை தத்தமது நலனுக்கு ஏறாற்போல் திரிபுபடுத்திக் காட்டுவது என்பன போன்றனவே அவைகளாகும்.            

 

இத்தகைய கெட்ட கூட்டத்தாரின் செயற்பாடுகளில் அகப்படாமல் தம்மைத் தற்காத்துக்கொள்வது அவரவரது கடமையே அல்லாமல் இன்னார், இன்னாரை விட்டும் தூர நின்றுகொள்ளுங்கள் எனக் கூறும் உரிமை யாருக்கும் கிடையாது என்பது கண்டிப்பாக யாரும் விளங்கிக்கொள்ளவேண்டிய முக்கிய விடயமாகும்.

©: மு. பிர்தெளஸ் றஷீத்

உசாத்துணை:

https://m.youtube.com/watch?v=bZgmQ1V0LDQ               

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...